ஆப்பிளுடன் ஒரு நடனம்
புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025
அது இரண்டரை நிமிஷ வீடியோ.
விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை.

அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். பாலாடைக் கட்டி போன்ற வாளிப்பான உடல். வட்ட முகம். கூழாங்கற்கள் போன்ற அழகான, பெரிய கண்கள். அந்தக் கண்களில் வெளிப்படும் சிரிப்பு தான் அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் படி தூண்டுகிறது.
அவள் ஆடும் நடனத்திற்குப் பெயர் எதுவுமில்லை. உண்மையில் அவள் யாருடனோ விளையாடுகிறாள், அந்த நடனத்தை யார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என வீடியோவில் தெரியவில்லை.
தலையில் ஆப்பிளை வைத்துக் கொண்டு அவளால் எப்படி இவ்வளவு வேகமாகச் சுழன்றாட முடிகிறது. நிச்சயம் இப்படிப் பல நாட்கள் ஆடிப் பழகியிருப்பாள். சிறுவயதில் துவங்கிய பழக்கமாக இருக்கக் கூடும்.
நமது ஊரில் கரகாட்டம் ஆடும் பெண்கள் கும்பம் வைத்துக் கொண்டு ஆடுவதில்லையா. அப்படித் தான் இதுவும். என்று தோன்றியது
ஆனால் அவள் தலையில் வைக்கபட்ட ஆப்பிள் ஒரு கனியைப் போல இல்லாமல் கிரீடம் போல மாறியிருந்தது.
சிறுவயதில் பம்பரத்தை சுழலவிட்டுக் கையில் வாங்கிக் கொள்ளத் தருவார்கள். உள்ளங்கையில் பம்பரம் சுழலும் போது ஏற்படும் கூச்சம். நெருக்கம். அலாதியான உணர்வு அவளது நடனத்தைப் பார்க்கும் போதும் ஏற்பட்டது.
விஜயராகவன் ஒவ்வொரு முறை அந்த வீடியோவைக் காணும் போதும் நடனமாடும் அவளது கைகள் காற்றில் ஏதோ எழுதுவதைப் போல உணர்ந்தார்.
அவள் நடனத்தின் போது தனது தலையில் ஆப்பிள் இருப்பதை மறந்திருந்தாள். பீறிடும் உற்சாகம். தனது உடலைத் தாமரை மலரென விரிக்கும் துடிப்பு. இளமை. இளமை. இளமை. அது தான் இப்படி ஆட வைக்கிறது. அவளது தலையில் இருப்பது ஆப்பிள் இல்லை. அவளது வயது.
அந்த வீடியோவை தனது தம்பிக்கு அனுப்பி வைக்கலாமா என விஜயராகவன் நினைத்தார். ஆனால் கவர்ச்சி நடனம் எனத் தவறாக நினைத்து விடுவானோ என்று தயக்கமாக இருந்தது.
கரீம்நகரில் வேலை செய்யும் அவரது தம்பி சந்தானகோபாலன் அன்றாடம் இருபது முப்பது வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்துவிடுகிறான். அவை பெரும்பாலும் ஜோதிடம், காமெடி அல்லது சாப்பாடு தொடர்பான வீடியோவாக இருக்கும். அவரும் பதிலுக்குச் சில நேரம் ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோவை அனுப்பி வைப்பார்.

விஜயராகவன் வேலை செய்யும் ஏடன் என்ற அமெரிக்க நிறுவனம் பங்குச்சந்தை தொடர்பான பணிகளையும் மேற்கொண்டிருந்தது. அதே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரிவில் அவர் வேலையில் இருந்தார். இதற்கு முன்பாகவும் இரண்டு பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் இருந்த காரணத்தால் இந்த நிறுவனத்தில் நல்ல சம்பளமும் மேலாளர் பதவியும் கிடைத்தது. ஆனால் ஒரே போன்ற சலிப்பூட்டும் வேலை. ஒரே அன்றாடம். இடைவிடாத அலுவலக மீட்டிங். திட்டமிடல். பொய் சிரிப்புகள். தூசி படிந்து கண்ணாடி ஜன்னல் மங்கிவிடுவதைப் போலத் தினசரிவாழ்க்கையின் கசடுகள் அவர் மீது நிறையவே படிந்திருந்தன.
அவரது ஒரே மகள் வர்ணா பெண்கள் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தாள். காதில் எப்போது இயர்பட்ஸை மாட்டிக் கொண்டிருப்பாள். பாட்டுக்கேட்கிறாளா. எவருடனாவது பேசிக் கொண்டிருக்கிறாளா என எதுவும் தெரியாது. வீட்டில் அவர்களுடன் பேசும் போது இடது காதில் உள்ள இயர்பட்ஸை மட்டும் கழட்டிவிட்டுக் கொள்வாள்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் விஜயராகவனின் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்து அதன்வழியே ஆபாச படங்களைப் பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டார்கள். அவரது பெயரில் நடந்த பகிர்வைப் பற்றி அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. முகம் தெரியாத ஒருவனால் தான் குற்றவாளியாக்கபடுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“பணம் கேட்டு ஏமாற்றாம.. இப்படிச் செக்ஸ் படம் மட்டும் அனுப்பி வச்சானேனு சந்தோஷப்படுங்க“ என்றார் சக ஊழியர் உமாபதி.
இது என்ன வகைச் சமாதானம் என அவருக்குப் புரியவில்லை. ஒருவன் அவமானப்பட வேண்டும். ஏமாற்றப்பட வேண்டும் எனப் பலரும் விரும்புகிறார்கள். அது போன்ற தருணத்தில் உள்ளூற ரசிக்கிறார்கள். மகிழ்கிறார்கள். அதைக் கண்கூடாக விஜயராகவன் அறிந்து கொண்டார்.
பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் பைக் திருடுகிறவனுக்கும் ஒரு உருவம் இருக்கிறது. ஆனால் செல்போனில் இப்படி மோசடி செய்பவனுக்கு உருவமில்லை. அவன் ஒருவனுமில்லை. ஒரு வலைப்பின்னல். கறுப்பு சிலந்தி.
குழப்பத்தில் அவருக்குக் கைகள் நடுங்கத் துவங்கின. உடனடியாகத் தனது செல்போனை மாடியிலிருந்து வீசி எறிய வேண்டும் போலிருந்தது.
மதிய உணவு நேரத்தின் போது அலுவலக நண்பரான ராஜேந்திரன் “இது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை“ என்று சொன்னதோடு சில ஆலோசனைகளையும் சொன்னார்
“ராகவா.. நீ முதல்ல இந்த சிம்மைக் கழட்டித் தூக்கி போடு.. நாளைக்கே புது சிம் வாங்கிக்கோ. கொஞ்ச நாளைக்கு யாருக்கும் வாட்ஸ்அப் அனுப்பாதே. இந்த மாதிரி மோசடி எல்லாம் பல்கேரியாவில் இருந்து ஒரு கேங் செய்றதா சொல்றாங்க“
பல்கேரிய ஆள் எதற்காகத் தனது வாழ்க்கையோடு விளையாடுகிறான். தன்னை அவமானப்படுத்துகிறான். அவருக்குத் திடீரெனத் தனது செல்போனை கையாளுவது அபாயகரமான ஆயுதம் ஒன்றைக் கையாளுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவருக்கு நடந்ததைப் பற்றிக் கேள்விபட்ட நிர்வாக அதிகாரி அன்சாரியும் சொன்னார்
“டெக்னாலஜியாலே உருவாகிற பிரச்சனைகள் எல்லாமே புதுசு. விநோதமானது. அதை நாம புரிஞ்சிகிடவே முடியாது. திடீர்னு இன்னைக்குக் காலைல என்னோட பேங்க் அக்கவுண்டை ஓபன் பண்ண முடியலை. பாஸ்வேர்ட் தப்புனு வருது. இதே பாஸ்வேர்ட் தான் இத்தனை நாளா யூஸ் பண்ணிட்டு இருக்கேன். அரைமணி நேரம் போராடி பார்த்து முடியலை. ஆபீஸ்ல வந்து அக்கவுண்டை ஒபன் பண்ணினா.. தானா ஒபன் ஆகுது… இதை எப்படிப் புரிஞ்சிகிடுறது. சொல்லுங்க“
இதைக் கேட்டு ராஜேந்திரன் வேடிக்கையாகச் சொன்னார்
“மெஷினுக்கும் புத்திகெட்டு போகும்னு புரியுது“
அவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். ஆனால் விஜயராகவன் சிரிக்கவில்லை. அவர் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கவலையால் பீடிக்கபட்டார். ஆபாசப்படத்தைத் தான் அனுப்பியதாக நினைத்துத் தன்னைத் தவறாக நினைப்பவர்களும் இருப்பார்களே. அவர்களிடம் எப்படி விளக்கம் சொல்வது. தொடர்பில் உள்ள அனைவருக்கும் தான் ஆபாசப்படம் அனுப்பவில்லை எனத் தகவல் அனுப்பினால் அது இன்னும் பெரிய வெட்ககேடு இல்லையா.
கதவிடுக்கில் அடிபட்ட விரலில் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாவது போல அவரது கவலை இரவிற்குள் அதிகமாகியிருந்தது.
வீடு திரும்பிய இரவில் தனது வாட்ஸ்அப்பில் இருந்து ஏதேனும் வீடியோ அல்லது மெசேஜ் வந்ததா என மனைவி மற்றும் மகளிடம் கேட்டார்
“எப்பவும் குட்மார்னிங் மெசேஜ், அதுவும் ஒரு ரோஜாப்பூ தானேப்பா அனுப்புவே“ என்றாள் மகள் வர்ணா
அப்படி அனுப்பி வைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மலர்கள் மீது என்ன கோபம். தினமும் நிஜமான ரோஜாப்பூவை கொடுத்தால் ஒரு வேளை சந்தோஷப்படுவாளோ என்னவோ.
அவரது மனைவி பானு அன்றாடம் ஒரு கோவிலின் வீடியோவை அவர் பார்க்க வேண்டும் என்று அனுப்பி வைக்கிறாள். இவ்வளவு ஆயிரம் கோவில்கள் இருப்பது இப்போது தான் அவருக்குத் தெரிய வந்தது.
பானு அடிக்கடி சிம்மை மாற்றிக் கொண்டேயிருப்பாள். எல்லாமும் ப்ரீபெய்டு சிம். அதனைக் குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவாள். பின்பு மாத கட்டணத்தை டாப்அப் செய்யமாட்டாள். ஆகவே அவரது செல்போனில் பானுவின் எண்களை வொய்ப் 1 வொய்ப் 2 வொய்ப் 3 வொய்ப் 4 என வரிசையாகப் பெயர் பதிவு செய்திருந்தார். சில நேரம் வொய்ப் 3 எனப் போன் அடிக்கும் போது அவரை அறியாமல் சிரிப்பு வருவதுண்டு.
ராஜேந்திரன் சொன்ன ஆலோசனைப் படி புதிய சிம் ஒன்றை வாங்கிக் கொண்டார் பழைய சிம் கார்டைத் தூக்கிப்போட்டார். இனிமேல் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவே கூடாது என்றும் நினைத்துக் கொண்டார்.
“ஏன்பா சிம்ம மாத்திட்டே“ என மகள் கேட்டாள்
“நெட்வொர்க் சரியில்லை“ என்று பொய் சொன்னார்
அலுவலக நிர்வாகப் பணிகளுக்காகப் புதிய வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்துள்ளதாகச் சொல்லி ராஜேந்திரன் கட்டாயப்படுத்தியதால் திரும்பவும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த துவங்கினார் ஆனால் பல்கேரியாக்காரனை நினைத்து மனதிற்குள் அச்சமாகவும் இருந்தது.
புதிய வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாதவனோ, ராஜியோ தான் ஆப்பிளுடன் நடனமாடும் பெண்ணின் வீடியோவை ஷேர் செய்திருந்தார்கள்.

நடனமாடும் துனிசியப் பெண் வீடியோவைக் காணக்காண அவருக்குள் ரகசிய ஆசையொன்று முளைவிட ஆரம்பித்தது. அந்தப் பெண்ணைப் போலத் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து ஆடிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. அப்படி நினைக்கும் போதே சந்தோஷமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
வீட்டில் தனது அறையை மூடிக் கொண்டு ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டபடியே அலுவலகம் விட்டு வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.
அவர் ஒரு ஆப்பிளை தலையில் வைத்து பார்ப்பதை கடைக்காரன் விநோதமாகப் பார்த்தான்
“சிம்லா ஆப்பிள் சார்.. மாவா இருக்கும்“ என்றான்
துனிசியப் பெண் தலையில் வைத்தாடும் ஆப்பிளைப் போல இல்லாமல் கடையில் இருந்த ஆப்பிள் அளவில் சிறியதாக இருந்தது
“கொஞ்சம் பெரிய ஆப்பிளா இல்லையா“ எனக்கேட்டார்
“அது டேஸ்டா இருக்காது சார்… சின்ன ஆப்பிள் தான் ருசி“ என்றான் கடைக்காரன்
“ஆடிப்பார்ப்பதற்குத் தானே“ என மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஆப்பிள்களை வாங்கிக் கொண்டார்.
வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல அவரது சாப்பாட்டு பையை வெளியே எடுத்துப் பார்க்கும் பானு ஆப்பிள்களைப் பார்த்தவுடன் சப்தமாகக் கேட்டாள்
“இந்த ஆப்பிள் எங்கே வாங்குனீங்க“
“கார்னர் கடைல“
“உங்களை நல்லா மாற்றியிருக்கான். இது பேரிக்காய் மாதிரி நறுச் நறுச்னு இருக்கும். இனிக்காது. “
“பரவாயில்லை. நான் ஆப்பிள் சாலட் சாப்பிடப் போறேன்“ என்று பொய் சொன்னார்
பானு விநோதமாகப் பார்த்தபடி கேட்டாள்
“உங்களுக்குச் சாலட் பிடிக்குமா“
அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் ரகசியமாக ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். ஆப்பிளை தனது தலையில் வைத்துக் கொண்டார். கண்ணாடி முன்பாக நின்று தலையில் ஆப்பிள் சரியாக நிற்கிறதா எனப் பார்த்துக் கொண்டார்
பின்பு துனிசியப் பெண்ணைப் போலக் கைகளை விரித்து ஆட முயன்றார்.
ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழுந்து உருண்டோடியது. மூன்று நான்கு முறை தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்றும் தோல்வியில் முடிந்தது வருத்தமாக்கியது. ஈரமான ஆப்பிளை வெள்ளை துண்டிற்குள் வைத்து மறைத்தபடியே குளியல் அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். மனைவிக்குத் தெரியாமல் ஆப்பிளை மேஜையில் கொண்டு போய் வைத்தார்
சிறிய விஷயங்களைச் செய்ய முடியாமல் போவதில் அடையும் ஏமாற்றம் அதிக வலி தரக்கூடியது என்று உணர்ந்தார்.
துனிசியப்பெண் தலையில் ஏதேனும் பசையை வைத்து ஒட்டிக் கொண்டிருப்பாளோ என்று சந்தேகம் வந்து வீடியோவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஆப்பிள் தலையில் தானே நிற்கிறது.
அடுத்த நாள் அந்த ஆப்பிளை பையில் போட்டு அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார். லிப்டில் தனியே செல்லும் போது தலையில் வைத்துப் பார்த்துக் கொண்டார். அலுவலகத்தின் கழிப்பறையினை மூடிக்கொண்டு தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்று தோற்றார்.
வீட்டில், அலுவலகத்தில், மொட்டைமாடியில். என எங்கே சென்றாலும் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தயக்கமும் கூச்சமும் ஏற்பட்டது. ஆகவே யாரும் பார்க்காத கடற்கரை பகுதிக்குப் போய்த் தலையில் ஆப்பிளை வைத்து ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.
வழக்கமாக அலுவலகம் விட்டு வீட்டுக்குப் போவதற்குப் பதிலாகக் கடற்கரை சாலையில் காரை ஒட்டிக் கொண்டு வெகுதூரம் சென்றார்.
மணல்மேடு ஒன்றினை ஒட்டி காரை நிறுத்திவிட்டு ஆப்பிளுடன் கடலை நோக்கி நடந்தார். வழியில் அறுந்த செருப்பு ஒன்று மணலில் தனியே கிடந்தது. நாய் ஒன்று மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது.
தொலைவில் ஒரு காதல் ஜோடி கண்ணில் பட்டது. அவர்கள் தன்னைப் பார்க்க மாட்டார்கள் என்ற முடிவோடு தனது பையிலிருந்த ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாட முயன்றார்.
ஆப்பிள் உருண்டு கடலை நோக்கி ஒடியது. அதைப்பிடிக்கப் போய்த் தடுமாறி விழுந்தார். வேகமாகப் பாய்ந்த அலை அவரை ஈரமாக்கியது. நனைந்த உடைகளுடன் மணல் ஒட்டிய ஆப்பிளை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார்
ஈரமான ஆப்பிள் என்பதால் தானோ என்னவோ அது தலையில் உறுதியாக நின்றது. அவர் கைகளை விரித்து ஆட முயன்றபோது உடல் எடைக்கல்லைப் போல இறுக்கமாக இருப்பதை உணர்ந்தார். உடல் வளைய மறுக்கிறது. கைகளை எளிதாகச் சுழற்ற முடியவில்லை. கழுத்தை இடது பக்கம் திருப்பும் போது வலிக்கிறது. சீரற்று அடைக்கப்பட்ட பஞ்சுத் தலையணைப் போலத் தனது உடல் இருப்பதை உணர்ந்து கொண்டார்.
ஒரு முறை சுழன்று வட்டமிடுவதற்குள் ஆப்பிள் விழுந்துவிடுகிறது. அந்த ஆப்பிள் அவரைக் கேலி செய்வதைப் போல உணர்ந்தார்.
பதினைந்து வயதில் இப்படி ஹாக்கி விளையாட வேண்டும் என ஆசை உருவாகி தினம் காலை எழுந்து மைதானத்திற்குப் போய்த் தீவிரமாக ஹாக்கி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் வந்து போனது. வேலைக்குப் போன பிறகு ஹாக்கி மட்டையைக் கையில் தொடவேயில்லை. இப்போது வரை அவர் ஹாக்கி விளையாடுகிற ஒரு போட்டோ கூட அவரிடம் கிடையாது. அவரது மனைவி கூட நம்ப மறுத்துவிட்டாள்.
இத்தனை வருஷங்களில் அவர் எதையும் செய்து பார்க்க ஆசைப்பட்டதில்லை. எத்தனையோ முறை நண்பர்கள் சீட்டாட அழைத்திருக்கிறார்கள். அதில் தனக்கு விருப்பமில்லை என மறுத்திருக்கிறார்.. இன்னொரு முறை அலுவலக விருந்தில் மியூசிகல் சேர் போட்டி நடந்தது. அதில் கலந்து கொள்ள முடியாது எனக் கோபமாகவே மறுத்துவிட்டார்.
இவ்வளவு உறுதியாக இருந்த தன்னை இந்த இரண்டரை நிமிஷ வீடியோ எப்படி மாற்றியது என அவருக்கே புரியவில்லை. ஒருவேளை பல்கேரியாக்காரன் தனது பெயரை கெடுக்க முயன்ற போது ஏற்பட்ட அச்சம் தான் இப்படி உருமாறியிருக்கிறதோ என்றும் தோன்றியது.

அந்த நடனத்தை வெறும் விருப்பமாக மட்டுமின்றிப் பந்தயம் போல உணர்ந்தார். அதில் வெல்வது தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் பரிசு. அப்படியான பரிசு எதையும் தனக்கு இத்தனை ஆண்டுகளாகத் தான் கொடுத்துக் கொள்ளவில்லை. சிறுவயதில் மரம் ஏறும் போதும், சுழித்தோடும் ஆற்றில் நீந்திக் குளிக்கும் போதும் இந்தப் பந்தயத்தை உணர்ந்திருக்கிறார்.
அலுவலகத்தில் தினமும் அவரது மேஜையில் ஒரு ஆப்பிள் இருப்பதை ராஜி தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
“ஏன் சார் தினமும் ஆப்பிளை கொண்டு வர்றீங்க.. சாப்பிடாமல் வீட்டுக்குக் கொண்டு போறீங்க“ எனக்கேட்டாள்
“இது சாப்பிடுற ஆப்பிள் இல்லை“ என்று மட்டும் பதில் சொன்னார்
ஒருவேளை பூஜையில் வைத்து மந்திரித்த ஆப்பிளாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டு கேட்டாள்
“எத்தனை நாள் சார் இப்படிப் பூஜை பண்ணி ஆப்பிள் வச்சிகிடணும்“
“அது என் வொய்ப்க்கு தான் தெரியும்“ என்றார்
அவர் ஆப்பிள் கொண்டு வரும் செய்தி அலுவலகம் முழுவதும் பரவியது. அவர் தனது காரின் முன்பாக நின்றபடி தலையில் ஆப்பிளை வைப்பதை பார்த்த வேலாயுதம் “பித்துப் பிடிச்சா தலைல எலுமிச்சம்பழம் தானே தேய்ப்பாங்க. சார் ஏன் ஆப்பிளை வைக்கிறார்“ எனக் கேலி செய்தான்.
ஆனால் இரண்டு மூன்று வாரங்களாகியும் அவரால் ஆப்பிளை தலையில் நிற்க வைக்க முடியவில்லை. விடுமுறை நாள் ஒன்றில் ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து நாள் முழுவதும் இந்த நடனத்தைப் பயிற்சி செய்து பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. இந்தத் தோல்வி அவரை மிகுந்த வருத்தமடையச் செய்தது.
வீட்டில் திடீரெனப் பின்னிரவில் எழுந்து கொண்டு கிச்சனுக்கு வந்து ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு கைகளைச் சுழற்ற முயன்று பார்ப்பார். ஆப்பிள் கிழே விழுந்து உருண்டுவிடும். அவரது விநோத நடத்தை மகளையும் மனைவியையும் கவலை கொள்ளச் செய்திருக்கக் கூடும்.
வர்ணா தான் முதலில் கேட்டாள்
“உனக்கு என்னப்பா. ஆச்சு. ஏன் என்னமோ மாதிரி இருக்கே“
“இல்லையே.. நல்லா தானே இருக்கேன்“
“நோ.. நடு ராத்திரில எழுந்து ஏன் தலையில ஆப்பிள் வச்சிகிடுறே“
“அது ஒரு டான்ஸ்மா“
“டான்ஸா.. நீ ஏன் அதைப் பண்ணுறே.. “
“நீ இந்த வீடியோவை பாரு புரியும்“ என மகளுக்கு அந்தத் துனிசியப் பெண்ணின் வீடியோவைக் காட்டினார். அவளுக்கு அந்த வீடியோ பிடிக்கவில்லை. எரிச்சலோடு சொன்னாள்.
“இது மாதிரி ஆயிரம் வீடியோ பாத்துருக்கேன்.. தலைல நிறையப் பானை வச்சிகிட்டு ஆடுற டான்ஸ் கூட இருக்கு. இதெல்லாம் கிம்மிக்ஸ். “
“இந்த பொண்ணு ஆப்பிளை வச்சிட்டு அழகா ஆடுறா. “ என்றார் விஜயராகவன்.
“அதுக்காக நீயும் ஆடுவியா. உனக்கு என்னமோ ஆகிருச்சி,, நாம ஒரு டாக்டரை பாக்கலாம்பா. “
அவளிடம் எப்படிப் புரியவைப்பது எனத்தெரியாமல் சொன்னார்
“ இதெல்லாம் ஜஸ்ட் பார் ஃபன். “
“அதுக்கு ஒரு தடவை செய்யலாம். நீ நிறைய நாள் நடுராத்திரில இப்படிச் செய்றே.. அம்மா ரொம்பப் பயப்படுறா.. உனக்காக நாகாத்தம்மன் கோவில்ல வேண்டுதல் பண்ணியிருக்கா“
“எனக்கு ஒண்ணும் இல்லை. ஐ ஆம் ஆல்ரைட்“
“அப்படின்னா.. இப்பவே இந்த ஆப்பிளை தூக்கி எறி“
“இல்லை. வர்ணா.. ஐ ஆம் கோயிங் டு பிராக்டிஸ் “ என்றார்
“அதான் ஏன்னு கேட்குறேன். நீயும் வீடியோ எடுத்து போடப்போறயா“
“நான் டான்ஸ் ஆடுனா. யார் பார்ப்பா“
“தெரியுதில்லை. பின்னே ஏன் இப்படிப் பண்ணுறே“
“இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்றே“
“இனிமே நீ ஆப்பிளை தொடவே கூடாது நம்ம வீட்ல ஆப்பிளே இருக்கக் கூடாது. “
“ஒகே. உங்களுக்குப் பிடிக்கலைன்னா.. விட்டுருறேன்“ என்று கோபத்துடன் கழிப்பறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
அவரது மனது சமாதானம் கொள்ளவில்லை. தான் விரும்புகிற ஒன்றை தனது சொந்த வீட்டிலே செய்ய முடியவில்லை. இவர்கள் ஏன சிறிய ஆசைகளைக் கூடப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமாக வந்தது. ஆற்றின் சுழலுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல ஆப்பிள் நடனத்திற்குள் தான் சிக்கிக் கொண்டுவிட்டதாக உணர்ந்தார். அன்றைய கனவில் அவர் நடனம் ஆட முயன்று தோற்றார். ஆப்பிள் தலையில் நிற்கவேயில்லை.
அதன் பிறகான நான்கு நாட்கள் எப்போதும் போல அலுவலகம் சென்றார். வீடு திரும்பினார். ஐந்தாம் நாள் அலுவலகம் விட்டு திரும்பி வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.
வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளை அழைத்தார்
“நான் இப்போ உங்களுக்காக ஆப்பிள் டான்ஸ் ஆடிக் காட்டப் போறேன்“
திகைத்துப் போன பானு கோபத்துடன் கேட்டாள்
“நீங்க அதை விடவேயில்லையே“
“ஒரு டிரை.. இப்போ பாரு“
என அவர் தான் வாங்கிக் கொண்டுவந்த ஆப்பிளை தலையில் வைத்தார். அவர் கையை உயர்த்துவதற்குள் ஆப்பிள் தலையில் இருந்து உருண்டு கிழே ஒடியது. யாரும் அதை எடுத்து தரவில்லை
“வர்ணா.. நீ வேணும்னா.. தலைல ஆப்பிள் வச்சி டான்ஸ் டிரை பண்ணேன்“ என்றார்
அவள் கோபத்துடன் கேட்டாள்
“கொலை பண்ணுற வீடியோ பாத்தா.. நாமளும் கொலை செய்தா எப்படி இருக்கும்னு டிரை பண்ணுவியாப்பா“
“அதுவும் இதுவும் ஒண்ணுல்லைம்மா. இது சும்மா ஜாலி“
பானு கோபத்துடன் வெடித்தாள்
“உங்களுக்கு ஆபீஸ் ஸ்ட்ரெஸ் அதிகமானா.. தியானம் பண்ணுங்க. இப்படி லூசு மாதிரி எதையாவது பண்ணிட்டு இருக்காதீங்க“.
“ ஏன் பானு இவ்வளவு கோவிச்சிகிடுறே. டான்ஸ் ஆடுறது தப்பா “
“டான்ஸ் ஆடுறதுக்கு நீங்க என்ன பச்ச பப்பாவா. வர்ணாவுக்குக் கல்யாணம் ஆயிருந்தா.. இந்நேரம் பேரன் பேத்தி பிறந்திருப்பாங்க. அந்த ஞாபகம் இருக்கட்டும். பாக்கிறதை எல்லாம் மனசுல வச்சிகிட கூடாது. அப்பப்போ மறந்துரணும். அது உங்களாலே முடியலை. எதைப் பாக்கணும். எதைப் பாக்க கூடாதுனு உங்க கண்ணுக்கு ஒரு பூட்டு போடணும்.. அப்படி ஏதாவது மெஷின் வந்திருக்கானு பாத்து சொல்லுங்க. அதை உடனே வாங்கிருவோம். “
அவளது கோபத்தை ஏற்றுக் கொண்டவரைப் போல அமைதியாக இருந்தார். அவருக்குள் குழப்பமான எண்ணங்கள் தோன்றி மறைந்தன. தன் மீதே அவருக்குக் கோபம் வந்தது. வருத்தம் உருவானது. கயிறு அறுந்து வானில் அலையும் பட்டத்தைப் போல உணர்ந்தார்.
தரையில் உருண்டு கிடந்த ஆப்பிளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்பு குனிந்து ஆப்பிளை கையில் எடுத்து வெறிகொண்டவரை போலக் கடித்துத் தின்னத் துவங்கினார்.
அதைத் திகைப்போடு பார்த்த மகளிடம் விஜயராகவன் சப்தமாகச் சொன்னார்
“நான் ஆப்பிள் திங்குறதை வீடியோ எடு.. சந்தானத்துக்கு ஷேர் பண்ணுவோம். குரூப்ல போட்டுவிடுவோம்.. “
வாயில் எச்சில் ஒழுக அப்பா பேசுவதை வர்ணா அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளது ஒரு காதில் இயர் பட்ஸ் மாட்டப்பட்டே இருந்தது.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
