கல்லளை [சிறுகதை]
(Disclaimer: இக்கதை நெடிய மானுட வரலாற்றில் எங்கேனும், எப்போதேனும் நடந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எழுத்தாளச் சுதந்திரத்துடன் முழுக்கக் கற்பனைப் புனைவாகவே நான் இதை முன்வைக்கிறேன். வாசகர்களையும் அவ்வாறே அணுகக் கோருகிறேன்.)
“மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!”
மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவர் சொன்னாள்.
அஹிம்ஸா புன்னகை செய்தாள். அவள் கொஞ்சம் கவலைகளுடன்தான் வந்திருந்தாள். சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. வீங்கித் தொங்கும் வயிற்றின் அடியில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அந்தப் புகார்களை எல்லாம் சொன்ன போது மருத்துவர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். அது அவளது பாஷை - ஒன்றும் பிரச்சனை இல்லை, அவை இயல்பான அறிகுறிகள் என்று அதற்கு அர்த்தம். அவள் சற்று நெற்றி சுருக்கினால் வழமையிலிருந்து விலகி இருக்கிறது, ஆனாலும் சரி சீர் படுத்திடலாம் என்று அர்த்தம். அசலாகவே பிரச்சனை எனில் வாய் திறப்பாள். சிக்கலும் தீர்வும் சுருங்கச் சொல்வாள்.
மருத்துவரிடம் வந்து செல்லும் இந்த ஏழெட்டு மாதங்களில் இச்சங்கேதக் குறிப்புகளை வாசிக்கக் கற்றிருந்தாள் அஹிம்ஸா. தாய்க்கும் சேய்க்கும் சேதாரமின்றி பிரசவம் பார்த்துக் கொடுப்பதில் அத்தீவு தேசத் தலைநகரின் அதிகார மட்டத்திடையே அந்த அம்மாள் பெயர் போனவள் என்பதால் அதையெல்லாம் சகித்துக் கொள்ளலாம்தான். போக, துல்லியமாகக் குழந்தை பிறக்கும் தினம் கணிப்பாள் என்றும் பேச்சு இருந்தது.

“கணவர் வரவில்லையா?”
“இல்லை, டாக்டர். எங்கள் நாட்டின் ஹை கமிஷனர்தான் இன்று இந்நகரின் மோஸ்ட் வான்டட் ஆள். தெரியும்தானே? அவர் எனது கணவராகவும் இருப்பதை யாராவது அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவரை நான் வீட்டில் பார்ப்பதே அரிதாகி விட்டது. பின்னிரவில் வந்து விட்டு அதிகாலையில் கிளம்பிப் போய் விடுகிறார். என் அம்மா என்னைப் பார்த்துக் கொள்ள இங்கே வந்திருப்பதால் சமாளிக்க முடிகிறது. குழந்தை பிறக்கும் போதாவது இந்த மருத்துவமனைப் பக்கம் வந்து விடுவார் என நம்புகிறேன்.”
“சமாதானப் படை வந்து இறங்கியதில் இருந்தே பதற்றமாக இருக்கிறது என்கிறார்கள்.”
“ஆனால் அவர்கள் வந்திருப்பதே இழந்துள்ள அமைதியை மீட்டுக் கொடுக்கத்தானே!”
மருத்துவர் பேசவில்லை. அவர் அரசியல் கதைக்க விரும்பவில்லை எனத் தோன்றியது.
அஹிம்ஸாவின் அம்மா சில கூடுதல் விபரங்கள் கேட்டுக் கொண்டாள். கிளம்புகையில் மருத்துவமனைக்கு அவள் முன் கூட்டியே வர வேண்டியதில்லை, ஆனால் வலி கண்டதும் தாமதிக்காமல் வந்து சேர்ந்திட வேண்டும் என்று சொல்லி அனுப்பினாள் மருத்துவர்.
*
தூதரகக் காரில் அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள். நிம்மதியாக இருந்தது. அப்பாவுக்கு அழைத்துச் சொன்னாள். அப்பா தாயகத்தில் சத்யாவின் வீட்டில் இருக்கிறார். சத்யாவும் வேலைக்குப் போவதால் அவளது குழந்தையைப் பார்க்க ஆள் வேண்டும். சத்யா அவளது அக்கா, பத்து நிமிடங்கள் மூத்தவள். அப்பாவுக்கு மஹாத்மாவை ரொம்பப் பிடிக்கும். அந்த வேகத்தில்தான் அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த போது சத்யா, அஹிம்சா எனப் பெயரிட்டார். அதை அக்குழந்தைகளே கேலிக்குரியதாகப் பார்த்தது அவருக்கு வருத்தம்தான். ஒருவேளை அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் மூன்றாவதற்கு ப்ரம்மச்சர்யா என்றுதான் பெயர் வைத்திருப்பார் அப்பா என்று பகடி செய்தார்கள். அவர்களுக்கு மஹாத்மா என்பவர் ஓர் அருங்காட்சியக வஸ்து மட்டுமே!
அப்பா மத்திய அரசின் நவரத்னா நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருந்தவர். அதன் வழியே கிடைத்த மேல்மட்டத் தொடர்புகள் மூலம் தன் மகள்கள் இருவருக்கும் அரசில் உயர் பதவி வகிக்கும் மாப்பிள்ளைகளைப் பேசி முடித்தார். அஹிம்ஸாவை அவளை விடப் பத்து வயது அதிகமான மிஷ்ரா கல்யாணம் செய்த மறுவாரமே அவனுக்கு ஹை கமிஷனராகப் பதவி உயர்வு கிடைத்து இத்தீவுக்குச் செல்லும் உத்தரவு வந்தது. மிகச் சிறிய வயதில் அப்பதவியை அடைந்தவன் என்பதால் அது அஹிம்ஸாவின் அதிர்ஷ்டம் என்றே கொண்டாடினான். ஒவ்வொரு கலவி முடிவிலும் அதைச் சொல்லிக் காட்டினான்.
அவர்கள் இத்தீவில் வந்திறங்கிய போது பூட்டானில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியுற்று மீண்டும் யுத்தம் வெடித்திருந்தது. அதனால் அருகிலுள்ள பெரிய நாட்டின் தூதரான மிஷ்ராவுக்கு நிறையப் பணி இருந்தது. அதனூடேதான் தேனிலவு கண்டார்கள்.
அவனுக்கு அவனது அறிவும் அவளது அதிர்ஷ்டமும் கலந்த ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் வேட்கை இருந்தது. மணமாகி ஓராண்டு கழித்து அவள் கர்ப்பமுற்ற போது அவன் பெரிதாக மகிழ்ந்தான். இப்போது பிரசவத் தேதி துல்லியமாகத் தெரிந்துள்ளது.
இந்தத் தீவிலிருக்கும் தனது நாட்டின் தூதரகத்துக்குத் தொலைபேசினாள் அஹிம்ஸா. மிஷ்ராவைக் கேட்டாள். முக்கிய வேலையில் இருக்கிறார், அவரே மறுபடி அழைப்பார், ஏதும் செய்தி இருக்கிறதா என்று அப்பெண் கேட்டாள். இல்லை என்று சொல்லி வைத்து விட்டாள். மறுபடி மிஷ்ரா அழைக்கவே இல்லை. அஹிம்ஸா தூங்கிப் போய் விட்டாள்.
*
அஹிம்ஸா மீண்டும் எழுந்த போது இருட்டி விட்டிருந்தது. மிஷ்ரா வீடு வந்திருந்தான்.
அம்மா அவனுக்கு உணவு பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கி இருந்தாள். அவசரமாக முகம் கழுவி வந்தவள், தான் உணவு பரிமாற எத்தனிக்க, அவன் அவளைத் தடுத்து தன்னுடன் சேர்ந்து சாப்பிடச் சொன்னான். புன்னகையுடன் அமர்ந்து கொண்டாள்.
“நல்ல தூக்கமோ?”
“ஆமா. அலைச்சல்.”
“டாக்டர் என்ன சொன்னார்?”
“செப்டெம்பர் 26 டெலிவரி.”
“ம்ம்ம். எல்லாம் நார்மலா?”
“அப்படித்தான் சொல்றார்.”
“சரி, பார்த்துக்கலாம்.”
“உங்களுக்கு லீவ் கிடைக்குமா?”
“இப்போதைக்குக் கஷ்டம்.”
“ம்.”
“புதுத் தலை வலி வேற ஆரம்பிச்சிருக்கு.”
“என்னது?”
“ஒரு சின்னப் பையன் தொந்தரவு கொடுக்கறான்.”
“போராளியா?”
“ஆமா. இருபத்து மூணு வயசுதான்.”
“போர் நிறுத்தம் அமலில் இருக்கே?”
“அவன் ஆரம்பித்திருப்பது பட்டினிப் போர்!”
“ஓ! முப்பது வருச அறவழிப் போராட்டம் வேலைக்காகலனுதானே ஆயுதம் ஏந்தினாங்க!”
“இப்ப மறுபடி ஏதோ ஞானோதயம்!”
“ஒருவேளை, இனி இப்படித்தானோ?”
“இல்ல இல்ல. போரும் அமைதியும் மாறி மாறித்தான் வரும். அமைதி நிலவுகையில் போராட வேறு வழியில்லை, அஹிம்சை மார்க்கத்தைத்தான் தேர்ந்தெடுத்தாகனும்.”
“ம்ம்ம். அப்படியா சொல்றீங்க?”
“ஆமா. ஒரு முறை துப்பாக்கி பிடிச்ச கை, கடைசி வரை அதை விடாது, விட முடியாது.”
“விடக்கூடாதுன்னும் சொல்லிடுவீங்க போல!”
மிஷ்ரா அடிபட்டவன் போல் அஹிம்ஸாவைப் பார்த்தான். அவள் கவனிக்கவில்லை.
“என்ன கோரிக்கையாம் அந்தப் பையனுக்கு?”
“என்னனவோ சொல்றான். சாத்தியமற்றவை.”
“என்னனுதான் சொல்லுங்களேன், கேட்போம்.”
“சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும், அவர்கள் பிரதேசங்களில் அரசு புதிய காவல் நிலையங்களைத் திறக்கக் கூடாது, ஊர்க்காவல் படைக்குத் வழங்கப்பட்ட ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும், அவர்களின் பகுதிகளில் நிகழும் பேரினக் குடியேற்றங்களை உடனே நிறுத்த வேண்டும், அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும்.”
“எல்லாம் தூரத்துச் சொப்பனங்கள் அல்லவா!”
“எல்லாவற்றையும் விட முக்கியமானது - இதை எல்லாம் சமாதானப் படை முன்னின்று உறுதி செய்யனும். அதுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் நம் அரசு சார்பில் தரப்படனும்.”
“ஓ! போராட்டமே நம் அரசை நோக்கித்தானா? இந்த நாட்டு அரசுக்கானது இல்லையா?”
“ஆமா. போராளிகள் இதே கோரிக்கைகளை ரெண்டு நாள் முன் எனக்கு அனுப்பி வெச்சு, பதிலளிக்க 24 மணி நேர அவகாசம் கொடுத்தாங்க. நான் இன்னும் பதிலளிக்கல. இப்ப அதே கோரிக்கைகளை முன் வெச்சு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்கான்.”
“அதாவது நம்ம அரசு சொன்னா இந்த அரசு தலையாட்டிக் கேட்கும்னு நம்பறாங்க?”
“ஆமா.”
“நியாயம்தான்.”
“என்ன நியாயம்? இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? நாம சொன்னா கேட்பாங்களா?”
“மாட்டாங்களா என்ன?”
“இப்பிரச்சனையில் நம் முதன்மை ஆர்வம் நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. பக்கத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரின் பக்கவிளைவு நம்மையும் பாதிக்கக்கூடும்.”
“அது மட்டும்தானா?”
“பிறகு? வேறென்ன?”
“இந்தப் பிராந்தியத்தில் பெரியண்ணன் வேடம் போடறோம். செஞ்சுதானே ஆகனும்!”
“அது வேற வழியில்ல. வல்லரசுக் கனவுகளின் பகுதி. ஆனா அதுக்கு எல்லை இருக்கு. இதெல்லாம் அவுங்க உள்நாட்டு விவகாரங்கள், நாம ரொம்பத் தலையிட முடியாது.”
“மூணு மாசம் முன்ன இங்கே ஆபரேஷன் பூமாலை நடத்தினப்ப இதை யோசிக்கலயா? ஒன்றரை மாசம் முன்ன சமாதானப் படையை இறக்கின போது? இப்ப என்ன புதுசா?”
“…”
“போராளிகளுக்கு ஆதரவா இந்தத் தீவின் அரசை எதிர்த்து வான் வழியா பாராசூட்ல உணவுப் பொட்டலம் வீசுனீங்களே, அதனால் அரசு போரை நிறுத்திப் பின்வாங்குச்சே, அப்ப நம்மை நம்பத்தானே செய்வான்? பக்கத்தில் இருக்கும் பெரிய நாட்டின் அழுத்தம் மாற்றம் ஏற்படுத்தும்ங்கற ருசி காமிச்சாச்சு. மறுபடி எதிர்பார்க்கத்தானே செய்வான்?”
“இல்ல. அது ஹ்யூமானிடேரியன் க்ரவுண்ட்ஸ்ல செஞ்சது. சிவிலியன் பகுதிகளில் குண்டு வீசினாங்க. அது சர்வதேசிய யுத்த விதிகளுக்குப் புறம்பானது. அப்ப நாம தலையிட வேண்டியதாச்சு. அதுக்காக நிர்வாகத் தீர்மானங்களில் மூக்கை நுழைக்க முடியுமா?”
“அவ்வளவு நல்லவர்களா நாம்!”
“இதில் நல்லவர், கெட்டவர் என்பதெல்லாம் இல்லை. நாம் பொறுப்பு மிக்க, சக்தி மிக்க ஓர் அண்டை நாடாக இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் ஒப்பந்தம் போட்டு சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு மேல் அவர்கள் தம்முள் பேசித் தீர்வு காண வேண்டும். அதை உறுதி செய்யும் பொருட்டே சமாதனப் படையை இத்தீவுக்குள் கொண்டு வந்தோம். இதுவே ஒருவகையில் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆனால் நம் பிரதமர் இதில் ஆர்வம் காட்டுகிறார். இதைத் தீர்த்து வைக்க விரும்புகிறார். அவருக்கும் தன் தாத்தாவைப் போல், அம்மாவைப் போல் உலக வரலாற்றில் இடம் பெறும் ஆசை இருப்பதில் தவறில்லைதானே! எனவே உலக அமைதி என்ற லேபிளில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாப் பொது நலத்திலும் ஒரு சுயநலம் உண்டு, அஹிம்ஸா!”
“சமாதானப் படை வந்ததை இந்தத் தீவு விரும்புகிறதா? அதுக்கு எவ்ளோ எதிர்ப்புனு பார்த்தீங்கல்ல? முதல் நாளே ராணுவ அணிவகுப்புல வெச்சு நம் பிரதமரை ஒருத்தன் தலையில அடிச்சுக் கொல்லப் பார்த்தான். இன்னிக்கு என்னைப் பார்த்த டாக்டர் கூட சமாதானப் படை சம்மந்தமாத் தன் அதிருப்தியை அடிக்கோடிட்டாங்க. நாம இதில் இறங்கிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதை இவர்கள் விரும்பல. இதுதான் ரியாலிட்டி.”
“ஆனா போராளிகள் விரும்பறாங்க, நம்மை நம்பறாங்க.”
“எக்ஸாட்லி. தேர் யூ ஆர். அப்ப அந்தப் பையன் கோரிக்கைகளை நிறைவேத்தனும்ல!”
மிஷ்ரா பெருமூச்சு விட்டான். எழுந்து கை கழுவி விட்டு நிதானமாகச் சொன்னான்.
“அது அவ்ளோ ப்ளாக் அண்ட் வொய்ட் இல்ல. அப்படி எளிதா முடிவெடுக்க முடியாது.”
“என்னவோ செய்ங்க! ஆனா சீக்கிரம் அந்த உண்ணாவிரதத்தை முடிக்கப் பாருங்க.”
“ம்ம்ம்.”
மிஷ்ரா எழுந்து கொண்டான். கடைசிக் கவளத்தை வாயிலிட்டு அஹிம்ஸா கேட்டாள்.
“மஹாத்மாதான் இந்த ஹங்கர் ஃபாஸ்ட் என்ற போராட்ட முறையின் பயனீர். ரைட்?”
“ஆமா.”
“பதினெட்டு உண்ணா விரதங்கள். அதுல ஒண்ணு 21 நாள். அப்பா சொல்லி இருக்கார்.”
“ஆனா இது அதை விட மோசம்.”
“எந்த வகையில்?”
“இந்தப் பையன் தண்ணியும் குடிக்க மாட்டேங்கறான். பூரணமான உண்ணா விரதம்.”
“அப்படியா? அதாவது உணவு சுத்தமா கிடையாது, அதோடு தண்ணியும் கிடையாதா?”
“கரெக்ட். ஐரிஷ் போராளி பாபி சாண்ட்ஸ் அப்படிங்கற ஆள் சிறையில் உண்ணா விரதமிருந்தார். அவர் கடைசி வரை தண்ணீர் குடிச்சிட்டுதான் இருந்தார். அப்படி இருந்தும் உண்ணா விரதத்தால் செத்துப் போனார். இவன் வேற ரகமா இருக்கான்.”
அஹிம்ஸா திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. மிஷ்ரா “குட்நைட்” சொல்லிப் படுக்கப் போய் விட்டான். காலை அவன் சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும்.
அஹிம்ஸாவுக்குத் தானும் நீர் அருந்தாமல் இருந்து பார்க்கலாம் எனத் தோன்றியது. உண்ட கரம் கழுவி விட்டு வந்து எப்போதும் தண்ணீர் குடிப்பாள். அன்று தவிர்த்தாள்.
சற்று நேரம் மொட்டை மாடியில் நடை பயின்றாள். வயிறு ரொம்பக் கனமாக இருந்தது. பிறகு கீழே இறங்கி வந்து மிஷ்ராவின் அருகில் படுத்தாள். தண்ணீர் தாகமாக இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். பிற்பகலில் தூங்கியதால் உடனே உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தவள் பின் எப்போதென்றே அறியாமல் தூங்கிப் போனாள்.
மருத்துவர் வந்து அவளை எழுப்பி, "நீங்கள் தண்ணீர் அருந்தாமல் இருந்ததால் சிசு கருப்பையிலேயே தாகமெடுத்து இறந்து விட்டது." என்கிறாள். திடுக்கிட்டு எழுந்தாள் அஹிம்ஸா. முகமெல்லாம் வியர்த்திருந்தது. கனவு. தொண்டை வறண்டு நீருக்குத் தவித்தது. எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு முழுச் சொம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வந்த போது பரம நிம்மதியாக இருந்தது. படுத்து மறுபடியும் தூங்கிப் போனாள்.
*
காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து பதினோராம் நாள் பிரசவம்!”
அன்று அவளுக்கு அஜீரணக் கோளாறு இருந்தது, புளிப்பு ஏப்பம் வந்தது, சப்தமாக வாயு பிரிந்தது, அதோடு மலச் சிக்கலும் சேர்ந்து கொண்டது. அஹிம்ஸா கர்ப்பம் ஆனதில் இருந்தே அவளது உடலில் ஏதாவது உபாதைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
அஹிம்ஸாவுக்கும் மிஷ்ராவுக்கும் இடையே வடக்கு - தெற்கு முரண்கள் பல தினசரி பழக்க வழக்கங்களில் வெளிப்பட்டன. குறிப்பாக மொழி, உணவு என நா சம்பந்தப்பட்ட விஷயங்களில். குழந்தைக்குப் பெயர் வைக்கும் விஷயத்திலும் அப்பிரச்சனை எழுந்தது.
மிஷ்ரா ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். எனவே அஹிம்ஸாவின் கர்ப்பம் உறுதியான போதே ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். பெண் குழந்தை பிறந்தால் மிஷ்ராவின் விருப்பப்படி பெயர் வைப்பது, ஆண் குழந்தை எனில் அது அஹிம்ஸாவின் விருப்பம். ஏழு மாதமான போது அவள் வயிற்றின் அமைப்பைப் பார்த்து நிச்சயம் ஆண் குழந்தைதான் என அவளது அம்மா அடித்துச் சொன்னாள். அப்போதே அவள் பெயர் தேர்ந்திருந்தாள். கமல். அவளுக்கு மிகப் பிடித்த நடிகர். ‘பேர் சொல்லும் பிள்ளை’ வேறு. அது வடக்கத்திய ஆட்களுக்கும் தொந்தரவில்லாத பெயர். பெரிய சலசலப்பு இராது.
மிஷ்ரா என்ன பெயரை மனதில் வைத்திருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். நாட்டின் முன்னாள் பிரதமரின் பெயர். அவர் இன்றைய பிரதமரின் அன்னையும் கூட.
மிஷ்ரா பெண் குழந்தை பிடிக்கும் எனக் காட்டிக் கொண்டாலும் அவன் உள்ளூர ஆண் பிறப்பதையே விரும்புகிறான் என அஹிம்ஸாவுக்குத் தோன்றும். அவனைப் போல் தன் நாட்டுக்கு ஓய்வு ஒழிச்சலின்றிப் பணியாற்றும் ஒரு தேச பக்தனைப் பெறுவதையே விரும்புவான். திடீரென உண்ணா விரதம் இருக்கும் இளைஞன் நினைவுக்கு வந்தான்.
என்ன ஆயிற்று அவன் விஷயம்? அவசரமாக அன்றைய செய்தித்தாள்களை எடுத்துப் பிரித்தாள். ஆங்கில தினசரியில் கடைசிப் பக்கத்தில் சிறிய செய்தியாக வெளியாகி இருந்தது. தமிழ் நாளேட்டில் மூன்றாம் பக்கத்தில் கால் பக்கச் செய்தி வந்திருந்தது.
“ஒருவேளை, இந்தப் பட்டினிப் போரில் நான் இறக்க நேரிட்டால் எனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தந்து விடுங்கள். தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணி மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். எனது மக்கள் விடுதலை அடைகின்ற காட்சியை என் கண்கள் பாராது என்பதே ஒரே ஏக்கம்.” என்று உரையாற்றி இருந்தான்.
மாணவர்கள் அவனைச் சந்திக்கிறார்கள். தள்ளாத தாய்மார்கள் உச்சி முகர்கின்றனர். போராளி இயக்கத் தலைவரே நேரடியாக அவனிடம் வாக்கி டாக்கியில் பேசுகிறார். எனில் இயக்கத்தில் அவ்வளவு பெரிய ஆளா என்ற கேள்வி அஹிம்ஸாவுக்கு எழுந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவன். தேசச்சூழல் உணர்ந்து படிப்பைக் கை விட்டுப் போராளி ஆனவன். இருபது வயதில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் கையிலிருந்த ஆயுதங்கள் தாங்கிய சூட்கேஸைத் தனி ஆளாகக் காப்பாற்றித் தப்பிக்கையில் கையில் துப்பாக்கிக் குண்டு வாங்கியிருக்கிறான். சில மாதங்கள் முன் நிகழ்ந்த சண்டையில் ராணுவத்தினர் பலரைச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அப்போது அவன் மேல் விழுந்த குண்டு உடலைச் சிதைத்தது. அவன் உயிரைக் காக்க, குடலின் 14 அங்குலத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்கி இருக்கிறார்கள். அந்த குடலுடன்தான் உண்ணா விரதத்துக்கு அமர்ந்திருக்கிறான்.
அவன் மீது மெல்லிய மதிப்பும் பிரியமும் அஹிம்ஸாவுக்கு எழுந்தது. எந்த இடத்தில் அவன் உண்ணா விரதம் நடக்கிறது எனப் பார்த்தாள் - நல்லூர் கந்தசுவாமி கோயில்.
திடுக்கிட்டாள். அது அத்தீவின் பிரபலக் கோயில்களில் ஒன்று. முழுக்கப் போராளிகள் கட்டுப்பாட்டில் இருந்த வடக்குப் பிராந்தியத்தில் இருக்கிறது. தலைநகரிலிருந்து சுமார் இருநூற்று நாற்பது மைல் தொலைவு. அத்தீவுக்கு வந்ததிலிருந்து அக்கோயிலுக்குப் போக வேண்டும் என்பது அவளது விருப்பம். ஆனால் வெவ்வேறு தடைகள் உண்டாகித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவள் கருவுற்றது உறுதியான முதல் நாளே தனக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்தால் முதலில் அங்கே வருவதாக வேண்டிக் கொண்டாள்.
மிஷ்ராவுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்பதால் அவனிடம் ஏதும் சொல்லவில்லை.
*
நுரை பொங்கப் பற்கள் துலக்கித் துப்புகையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து பத்தாம் நாள் பிரசவம்!”
அன்று அவளுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் இல்லை. படுக்கையிலிருந்து எழும் போதே வலது காலில் தசை பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் உயிர் போய் வந்தது.
பத்திரிக்கைகள் துணையோடு உண்ணா விரத நிகழ்வுகளைக் கண்காணித்தாள்.
அவன் உண்ணாவிரதப் போராட்ட மேடையிலிருந்தபடி பத்திரிக்கைகள், புத்தகங்கள் என வாசிக்கிறான். போராட்டம் பற்றிய உணர்ச்சிகரக் கவிதைகள் வாசிக்கப்படுவதை ரசிக்கிறான். அவனும் உரை நிகழ்த்துகிறான். போராளி இயக்கத் தலைவர் அவனை வந்து நேரில் சந்திக்கிறார். இரவு வரை பேசிக் கொண்டிருக்கிறார். கிளம்புகையில் உண்ணா விரதத்தின் போது அதிகம் பேசினால் உடல் சோர்வுறும் எனத் தவிர்க்கச் சொல்கிறார். அவன் ஏற்கிறான். அவனைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்புகிறார்.
அவனது கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று அன்றைய தினசரியில் வெளியாகி இருந்தது. மிக ஒல்லி. வசீகரமான முகம். அதில் கண்ணாடி போட்டிருந்தான். அளவான அடர்மீசை. இடக் கையில் கடிகாரம். முழுக்கை சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனது உதடுகள் வெடித்து வெளிறிப் போயிருந்தன. கண்கள் உள்ளே போயிருந்தன. முகம் வறண்டு, காய்ந்து கிடந்தது. தலை கலைந்திருந்தது.
அவன் உயிர் பிழைக்க வேண்டும். ஒரு வேளை செத்தாலும் துப்பாக்கியால் சுடப்பட்டோ, குண்டு வெடித்துச் சிதறியோ சாகட்டும். பசியால் கூடாது என நினைத்துக் கொண்டாள்.
*
கழிவறையில் முக்கிக் கொண்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் பிரசவம்!”
அன்று காலையிலிருந்து அவளுக்கு சோப்புத்துண்டோ சாக்கட்டியோ தின்ன வேண்டும் என்ற வேட்கை இருந்தது. வீட்டிலிருந்த சகல வாசனைகளும் துல்லியமாகத் தெரிந்தன.
வானொலி மூலம் உண்ணா விரதச் செய்திகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் அஹிம்ஸா.
அவன் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் ஆலயத்தின் முன்னிருந்த மைதானம் ஜனக் கூட்டத்தால் நிறைந்தது. முதலில் நூற்றுக்கணக்கிலும் அப்புறம் ஆயிரக்கணக்கிலும் இருந்த கூட்டம் இப்போது லட்சத்தைத் தொட்டு விட்டது. மழை பெய்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது நின்றனர். ஒலிபெருக்கி பிரபலக் கவியின் வரிகளை முழக்கமிட்டுக் கொண்டிருந்தது: ‘இவன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா?’
அவன் பற்றிக் கூடுதல் தகவல் சொன்னார்கள். ஈராண்டுகள் முன் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டதிலிருந்து சிக்கலான பொது மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்திருந்தான். பஸ் வழிமறிப்புப் போராட்டம், மீனவர்களிடையேயான கடல் எல்லைப் பூசல்கள், தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள், பல்கலைக்கழகத்தில் உண்டான தகராறுகள், கடை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இடையேயான பிரச்சினைகள் – இப்படிப் பல விஷயங்களைப் பேசியே சமரசம் செய்திருக்கிறான்.
ஒரு முறை இரண்டு மதத்தினரிடையே நடந்த துப்பாக்கி, எறிகுண்டு பாவித்த கலவரச் சண்டையையே பேச்சுவார்த்தைகள் மூலமே சரி செய்தான். எனவே அஹிம்சையின் மீது அடிப்படையிலேயே அசலாக நம்பிக்கை வைத்திருப்பவன். மிஷ்ரா சொன்னது போல் போர் நிறுத்த காலத்தில் கையாளும் தற்காலிக உத்தி அல்ல எனத் தோன்றியது.
அன்றைய மாலை செய்தித்தாள் அவன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க இயலாமல் சிரமப்பட்டான் என்றது. அவன் நீர் அருந்தி ஐம்பது மணி நேரம் மேலாகி விட்டது. உடனிருந்த போராளிகள் தண்ணீர் எடுக்கச் சொல்லி அவனை வற்புறுத்த, அவன் சட்டென வெகுண்டான்: "பெயரைக் கவனியுங்கள். உண்ணா விரதம். அதன் அர்த்தம் என்ன? ஏதும் உண்ணாதிருப்பது. க்ளுக்கோஸ், இளநீர், தண்ணீர் எல்லாமே உணவுதாம். இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். அது உண்ணாவிரதம் இல்லை. ஒரு புனித இலட்சியத்துக்காகவே நான் என்னை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன். வெறும் அரசியல் லாபத்துக்காக அல்ல. வயிறு முட்டத் நீரருந்தி விட்டு என்னையும் ஏமாற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது. இனி என்னை யாரும் தண்ணீர் குடிக்கச் சொல்லிக் கேட்க வேண்டாம். நேரடியாகச் சொன்னால் அது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது.”
பெருமூச்செறிந்தாள். அப்பிடிவாதத்தின் மீது சினமெழுந்தது. தூங்க முயற்சி செய்தாள்.
*
குளியலறை நீர்ப் பொழிவில் நின்றிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து எட்டாம் நாள் பிரசவம்!”
முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. கண்கள் சிவந்திருந்தன. தலை வலி வந்தது.
இன்னும் வானொலியையும் பத்திரிக்கைகளையுமே தகவலுக்குச் சார்ந்திருந்தாள்.
உண்ணாவிரத மேடையில் முந்தைய இரவு அவ்விளைஞன் நன்றாக உறங்கி விட்டான். தாமதமாகக் கண் விழித்தவன் எழச் சத்தின்றி படுக்கையில் கிடந்தான். நாடித் துடிப்பு அதிகரித்திருக்கிறது. நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் குறையத் தொடங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்கள் சிறுநீர் கழியவில்லை எனில் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும். அது இருதயத்தில் பாதிப்பை உண்டாக்கி ஆளைச் சாகடிக்கும்.
அன்று அவனுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர் வரவழைக்கப்பட்ட போது குழறிய குரலில் அவன் சொன்னான்: “எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பலவந்தமாகவோ, சுயநினைவற்ற நிலையிலோ தர முயற்சி செய்யக்கூடாது. என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறப்பது வரை எவ்விதப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யக் கூடாது. இதுக்குச் சம்மதிப்பதாகச் சத்தியம் செய்து தாருங்கள்.” போராளிகள் அவனது கை பிடித்தனர். மருத்துவர் வேறு வழியின்றி வெளியேறினார்.
தேவாலயப் பாதிரியார் ஒருவர் வந்து அவன் கிடந்த கோலம் கண்டு தான் உணர்ச்சி துறந்தவன் என்பதையும் மறந்து கதறி அழுதார். நல்லூர் கந்தசுவாமியிடம் அவனைக் காக்கும்படி மக்கள் மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். நாடெங்கும் ஆலயங்களில் அது நடந்தது. உண்ணாவிரதம் பற்றிய செய்தி சர்வதேச அளவில் பரவியது. ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பலர் கவலையுடன் தொலைபேசி நிலைமையை விசாரிக்க ஆரம்பித்தனர். அது அவளது நாட்டின் தென்முனையிலும் கொந்தளிப்புகளை உண்டாக்கி இருப்பது தெரிந்தது. அன்றைய இரவில் அவளும் அவனுக்காக வழிபட்டாள்.
*
புடவை கட்டி மடிப்புகளைச் சரி செய்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஏழாம் நாள் பிரசவம்!”
காலையிலிருந்தே வாந்தி வருவது போல் உணர்வு. ஆனால் வரவில்லை. பெயர்தான் ‘மார்னிங் சிக்னஸ்’, ஆனால் நாளெல்லாம் இருக்கிறது என நொந்து கொண்டாள்.
போராளிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேவையைக் கண்டுகொண்டாள். அதில் தினமும் அரை மணி உண்ணா விரதம் பற்றிய செய்தித் தொகுப்பு இடம் பெற்றது.
அன்று அவனால் பத்திரிக்கைகள் வாசிக்க முடியாத அளவுக்குச் சோர்வும் மயக்கமும் ஆட்கொண்டு விட்டது. போர்வைக்குள்ளையே அடைந்திருந்தான். மின் விசிறியை மீறி உடல் வியர்த்தது. சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதன் அறிகுறி அது. மக்கள் நாடெங்கிலும் இருந்து பேருந்துகள், மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் என கிடைக்கும் வாகனங்களில் எல்லாம் ஏறிவந்து குவிய ஆரம்பித்தார்கள். சிலர் நடை பயணமாகவும்.
போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் வந்து அன்று அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் என்ற செய்தி மாலை வந்தது. ஆனால் பேசிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. நள்ளிரவில் மிஷ்ரா வந்த போது தவறாமல் அது பற்றி வசாரித்தாள்.
“நம் அரசிடமிருந்தோ, என்னிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றுதான் அவரால் அவனிடம் சொல்லியிருக்க முடியும். அவன் நம் அரசை நோக்கி சரியாக நமது அடையாளமான மஹாத்மாவின் ஆயுதம் ஏந்தி நிற்கிறான். அது நல்ல நகர்வு. இரு அரசுகளும் இந்தப் போராட்ட வடிவிற்குச் சங்கடம் கொள்கின்றன. இதை எப்படிக் கையாள்வது எனத் தடுமாறுகின்றன. ஒருவேளை அவன் வெல்லவும் கூடும்.”
அஹிம்ஸா மனம் நிறைந்து மிஷ்ராவை இறுகக் கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள்.
*
தலையில் மலர் சூடி நுதற்பொட்டு வைக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஆறாம் நாள் பிரசவம்!”
அன்று அவள் எழுந்த போதே லேசான தலை சுற்றல் இருந்தது. கால்களும் கைகளும் வீக்கம் கண்டிருந்தன. சிறுநீர் கழித்த போது ஒருவிதமான எரிச்சலை உணர்ந்தாள்.
ஒரே செய்தியை தனியார் பத்திரிக்கை, அரசின் வானொலி, போராளி தொலைக்காட்சி என ஒவ்வோர் ஊடகமும் வெளியிடுகையில் அவற்றுக்கிடையே மெல்லிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள். உண்மைச் செய்தி என ஒன்று இருக்கிறதா என்று வியந்தாள்.
அன்று அதிகாலையிலேயே எழுந்து அதிசயமாக அரை லிட்டர் சிறுநீர் கழித்தான். அதை ஒரு சாதனை போல் உற்சாமாகச் சொல்லியிருக்கிறான். “விளக்கு அணையும் முன்பு பிரகாசமாக எரியும், அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று சுயபகடியும் செய்திருக்கிறான். பின் மெல்லிய குரலில் ஓர் உரை ஆற்றியிருக்கிறான்.
“என் மண்ணின் மக்களே! என்னால் பேச முடியவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் தரும் உற்சாகம் என்னைப் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்தின் பிரஜைகளே, உங்களிடம் பெரிய பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் யாவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். இந்நிலத்துக்காக உயிர் நீத்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக மேலிருந்து மலரும் தனி தேசத்தை மகிழ்ந்து பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.”
போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் அன்று அவள் நாட்டிற்குப் போயிருக்கிறார் எனச் செய்தி வந்தது. அது அவள் தேசப் பிரதமர் அழைப்பின் பேரில், உண்ணா விரதம் பற்றிப் பேசுவதற்காக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பி இருந்தன. இரவு மிஷ்ரா வருவதற்காகக் காத்திருந்து அது பற்றி விசாரித்தாள் அஹிம்ஸா. அங்கே அப்படி ஏதும் சந்திப்பு நிகழவில்லை, சாதாரணப் பயணம் அது என்று சொல்லி ஏமாற்றம் தந்தான்.
*
சமையல் அறையில் காஃபி போட்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஐந்தாம் நாள் பிரசவம்!”
அவளது வாய் ஈறுகளில் வீக்கமும் பற்களில் ரத்தக் கசிவும் உண்டாகின. சூல் கொண்ட வயிற்றில் வீக்கம் அதிகரித்து பக்கவாட்டில் லேசாக வலிக்கும் உணர்வு தோன்றியது.
அவனது இதயத் துடிப்பு 140 ஆக அதிகரிக்க, இரத்த அழுத்தம் 80/50 என்று விழுந்தது.
மக்கள் பெருக்கம் அதிகரிப்பதாலும், வெயிலும் மழையும் குளிரும் தாக்குவதாலும், பெண்களும், குழந்தைகளும் கூடுவதாலும் மைதானம் முழுக்கவும் உண்ணா விரத மேடையைச் சுற்றிக் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்தனர். அங்கேயே வேறு சிலரும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். நாட்டின் மற்ற பாகங்களிலும் தம் ஆதரவை வெளிப்படுத்த மக்கள் அடையாள உண்ணாவிரதங்கள் இருந்தனர். மெல்ல மெல்ல ஒரு மக்கள் எழுச்சி இயல்பாக உருவாகிக் கொண்டிருந்தது. அரசு கவலைப்பட்டது. நகரைச் சுற்றி சமாதானப் படையின் ஹெலிகாப்டர்கள் பறந்து அதை அளந்து கொண்டிருந்தன.
மிஷ்ரா இன்று போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தக்கூடும் என்று ஒரு செய்தி வந்தது. எப்போதும் மிஷ்ராவின் பெயர் அப்படி வானொலியிலோ செய்தித்தாளிலோ தொலைக்காட்சியிலோ கண்டால் அவளுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால் அன்று அதை மீறி உண்ணா விரத விஷயத்தில் என்ன முடிவு எட்டப்படும் என்பதே அவளது ஆர்வமாக இருந்தது. அதன் மூலம் அவன் உணாவிரதத்தைக் கைவிட்டால் உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தயார் நிலையில் இருக்கிறது. அங்கே அவசர சிகிச்சை அளித்தால் மூன்று நாட்களில் அவன் உயிர் பிழ
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
