விமலாதித்த மாமல்லனின் - புனைவு என்னும் புதிர்:
இப்புத்தகத்தை, இலக்கியத்தை நேசிக்கும் வாசிப்பைத் தொடர்ந்து விவாதிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்தபடியே இருக்கிறேன். இவரை நான் இணையத்துக்குள் வந்த காலத்தில் (2010) இருந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வாசிப்பையும், எழுத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டதில் இவரது எழுத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஓர் இடைவெளிக்குப் பிறகு திரும்ப எழுத வந்த ஆரம்பத்தில் இவரெழுதிய 'எழுத்துக்கலை' என்னும் தொடர் என்னுள் மிகப்பெரும் திறப்பையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கிளப்பியது. படைப்பாளியின் மீதான பிரமிப்பையும், ஆதர்ஸங்களையும் ஓரமாக ஒதுக்கிவிட்டு ஒரு படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எத்தனை கறாருடன் அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்த மிக முக்கியமான தொடர் அது."எழுத்துக்கலை" தொடரையும் அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அவரது தளத்தில் வெளியான சில கட்டுரைகளையும் வாசித்தப் பிறகு அது - முகப்புத்தகத்தில் இடும் சிறுபதிவோ, அலுவலகத்தில் அனுப்பும் இ-மெயிலோ - ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப் பார்க்காமல் அனுப்பியதில்லை. சிறுகதை ஒன்றை முயற்சிக்கும் போதெல்லாம் இவர் இதை வாசித்தால் எப்படி பதில் அளிப்பார். எங்கெங்கே கொட்டு விழும் என்றெண்ணி நானே திரும்பத் திரும்ப வாசித்துத் திருத்திக் கொண்டிருப்பேன்.'புனைவு என்னும் புதிர்' தி இந்துவில் தொடராக வெளிவந்தது. ஆனால் தொடர்ச்சியாக வெளியாகவில்லை. திடீரென்று நின்றும் போனது. அது குறித்து மாமல்லன் அவர்களைக் கேட்ட போது, "என் கிட்ட வந்து ஏன் கேக்குறீங்க? முடிஞ்சா தி இந்துக்கு எழுதுங்க" என்றார். எழுதினேன். இன்னும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.இந்நூலை வாசிப்பதற்கு என்னளவில் ஒரு தனிப்பட்ட அணுகுமுறை உண்டு. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருக்கும் சிறுகதையை வாசிக்க வேண்டும் (புத்தகத்தில் கட்டுரை முதலிலும், கதை அடுத்தும் வந்துள்ளன). ஒரு கதையை வாசித்ததும், அது சொல்ல வரும் செய்தியை, வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் 'சப் டெக்ஸ்டை'ப் பற்றி ஓரிரு நிமிடங்கள் மனதுள் ஓட்டிப் பார்க்கலாம். சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லையா ? பாதகமில்லை. அடுத்து அக்கதையை வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்க வேண்டும். சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒரு முறை அந்தக் கதையை வாசித்து விட வேண்டும். இப்போது, முற்றிலும் புதிதான ஒரு கதை உங்கள் முன் இருக்கும் !ஒரு சிறுகதையைப் புரிந்து கொள்ள இத்தனை சிரமும், பயிற்சியும் தேவையா?"கதையின் உயிர் கருவில் இருக்கிறது. உணர்வுபூர்வமாய் ஒன்றை அனுபவித்த கலைஞன், வாசகனை உணர்ச்சிப்பூர்வமாய்த் தூண்டுவதைவிட உணர வைப்பதையே முதன்மையான காரியம் எனக் கருதுவான். அதன் காரணமாகவே அதீத நாடகீயமாய் விவரிக்கும் அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறான் " - சு.ரா-வின் 'பள்ளம்' கதை பற்றிய கட்டுரையில்.இதிலுள்ள கட்டுரைகள் படைப்புகளின் நுட்பங்களை விளக்கி, பூடகமாய் மறைந்து நிற்கும் பகுதிகளைக் கோடிட்டுக் காட்டி, அதன் வழியே ஒரு வாசகனை இவற்றைப் போன்ற மேலும் சில நல்ல படைப்புகளை நோக்கி நகர்த்தவும் செய்கின்றன.இதிலிருக்கும் ஒரே ஒரு குறை வெறும் 12 கதைகளுடன் நிறுத்திவிட்டார் என்பதுதான். (இதைச் சொன்னால் எங்கே ஜெயகாந்தன் போல பதில் சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது


Published on July 10, 2018 08:59
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
