பெருங்களிறு [குறுநாவல்] - 2

பெருங்களிறு - பாகம் 1: தலை  *

பாகம் 2: உடல்

தம்மா வழக்கம் போல் கொட்டடியில் இருந்த நரதுவுக்கும் மின்சாவுக்கும் குடுவையில் தேநீர் எடுத்துப் போய் கோப்பையில் ஊற்றினாள். மின்சா அதைப் பருகியபடி கேட்டான்.

“அண்ணா, இந்த வெள்ளை யானை ஏன் இப்படி இருக்கிறது?”

“இப்படி என்றால்?”

“அமைதியற்று

“ம்ம்ம். அதைக் கேட்கிறாயா! இதற்குப் பின் ஒரு சிறிய கதை இருக்கிறது என்கிறார்கள்.”

“என்ன அது?”

“துயரக் கதை. பரவாயில்லையா?”

“சொல்லுங்கள்.”

தேநீர் பருகிக் காலிக் கோப்பைகளைத் தரும் வரை காத்திருந்து அவற்றை வாங்கிப் போவது தம்மாவின் வழக்கம். அன்று அப்பேச்சு ஆர்வம் ஊட்டியது. அவர்கள் சீக்கிரம் தேநீர் பருகி விடக்கூடாதே எனக் கவலைப்பட்டாள். அப்புறம் அங்கே நிற்க முடியாது.

“ரத்த நந்தகாவுக்கு ஒரு பெண் துணை உண்டு. அதன் வழி ஓர் அழகிய‌ குட்டி யானையும் இருந்துள்ளது. பெட்டைக் குட்டி என்கிறார்கள். நம் ஆட்கள் சியாம் ஆக்ரமிப்புப் போரில் வெற்றி பெற்று ரத்த நந்தகாவை இங்கே அழைத்து வரும் போது குடும்பத்தோடா கூட்டி வருவார்கள்! மனைவியையும் மகளையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள்.  ரத்த நந்தகா குடும்பத்தைப் பிரிந்த துயர‌த்தில்தான் எல்லோர் மீதும் எரிந்து விழுகிறது என்கிறார்கள். குறிப்பாக அதன் கலவித் தேவையை யார் நிறைவேற்றுவார்கள், சொல்?”

நரது சொல்லி விட்டு வலக்கை விரல்களை மடக்கிக் குத்துவது போல் சைகை செய்தான். மின்சா நாணத்தில் இளிக்க, தம்மா சங்கடமாகிக் காலிக் கோப்பைகளுடன் நழுவினாள்.

அன்றைய‌ இரவு ரத்த நந்தகா மீதேறி உலாப் போன போது தம்மா மறவாமல் கேட்டாள் –

“நரது என்ன அப்படிப் பேசுகிறார்!”

“எப்படி?”

“கேட்டு எனக்குக் காதுகள் கூசி விட்டன. நீயோ வாயெல்லாம் பல்லாக நிற்கிறாய்.”

“எதைச் சொல்கிறாய் தம்மா?”

“ரத்த நந்தகாவின் கதையைச் சொல்லி முடித்து விட்டு…”

“ஓ! அதுவா! உண்மைதானே அது!”

“கலவி என்ன அவ்வளவு முக்கியமா?”

“இல்லையா?”

“ம்.”

“உன் தனித்த‌ இரவுகளைக் கேளேன்.”

“ம்ம்ம்.”

“நிச்சயமாக கூடல் இன்பம் என்பது மிக முக்கியமானதுதான் தம்மா. மிருகம், மனிதர் என ஒவ்வோர் உயிருக்கும் அத்தியாவசியம். சற்று யோசித்தால் நீரை விட, உணவை விடவும் கூட மேலாக முக்கியமானது என்பேன். உலகை இயக்குவது காமம்தான். உலகம் ஒரு மையப் புள்ளியைச் சுற்றி இயங்க முடியும் எனில் அது பெண்ணின் யோனிதான்.”

“ச்சீய்...”

“இந்த யானை விரக தாபத்தில் இருக்கிறது. இதைச் சாந்தப்படுத்த இங்கே ஒரு பெண் யானையை அழைத்து வந்து கூட்டிக் கொடுக்கப் பார்த்தார்கள். ஆனால் ரத்த நந்தகா அதை நிராகரித்து விட்டது. யானைகள் மனிதர்கள் போல்தான். வாழ்நாளில் ஒரே ஒரு பெண் இணையுடன்தான் வாழும். பிரிந்த தனது இணைக்கு இது ஏங்கிக் கிடக்கிறது.”

“ம். பாவம்.”

“நானும்தான் பாவம்.”

மின்சா சொல்லிக் கண்ணடிக்க, திரும்பி பின்னமர்ந்த அவன் நெஞ்சில் குத்தினாள்.

யானை சமதளமற்ற பரப்பில் ஏறி இறங்கியதில் குலுங்கியது. அவர்கள் இருவரும் விழுவது போல் தடுமாறிச் சீரானார்கள். அந்த ஆட்டத்தைப் பயன்படுத்தித் தகாத இடத்தில் கை வைத்தான் மின்சா. தம்மா வெட்கத்தில் கண்கள் மூடிக் கொண்டாள். சாட்சியாகப் பார்த்திருந்த‌ வெண்ணிலவும் மேகத்தின் பின்னோடிக் கண் மூடியது.

அன்று தைரியம் பெற்று சவாரி முடிந்து ரத்த நந்தகாவை விட்டு இறங்கியதும் அதை மண்டியிடச் செய்து அதன் தந்தங்கள் இரண்டிலும் தன் கைகளை வைத்தாள் தம்மா. அதற்கு நன்றி சொல்வது போல் மத்தகம் எனப்படும் அதன் முகத்தில் முத்தமிட்டாள்.

பாறையைப் போன்ற அந்தப் பிரம்மாண்ட உடல், உயிர் பெற்றது போல் ஒரு கணம் சிலிர்த்தது. அதை அவளால் துல்லியமாக‌ உணர முடிந்தது. திடுக்கிட்டாள். மின்சாவிடம் பரபரப்பாக அதைச் சொன்னாள். அவன் அலட்சியமாக அது அவளது பிரமை என்றான்.

*

காதலையும் கர்ப்பத்தையும் வெகுகாலம் மறைக்க‌ முடியாது என்பது தம்மாவுக்குத் தெரியவில்லை. ஓர் இரவு தம்மா யானைச் சவாரிக்குப் போயிருந்த போது சிறுநீர் கழிக்க எழுந்த சந்தா அவளைக் காணாமல் பதறிக் கண் விழித்துக் காத்திருந்தாள். தம்மா அவளைக் கண்டு அதிர்ந்தபடி தலை குனிந்தபடி குடிலுக்குள் நுழைந்தாள்.

“தம்மா, உன் விருப்பத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை. மின்சா என்ற தேர்வில் ஆட்சேபமும் கூட‌ இல்லை. ஆனால் எனக்கு ஒரு கேள்வியும் ஒரு கட்டளையும் உண்டு.”

“ம்.”

“உனது ஒரே சொத்தான‌ கன்னித்தன்மை இன்னும் களங்கமுறாமல் இருக்கிறதா?”

சந்தாவைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் தம்மா. ‘ஆம்’ என உறுதியாகத் தலையாட்டினாள்.

“உரிய வேளை வரட்டும். நரதுவிடம் பேசிச் சம்மதம் பெற்று உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். அது வரை இப்படி இரவில் அலைய வேண்டாம். பகலிலும்தான்.”

“…”

அவ்வளவுதான். வேறு பேச்சில்லை. அவ்விரவு வெகுநேரம் இருவரும் உறங்கவில்லை.

மறுநாள் மின்சா ரத்த நந்தகாவுக்கு வெல்லம் கலந்த சோற்றுக் கவளம் உருட்டி ஊட்டிக் கொண்டிருந்த‌ போது சந்தாவுக்கு விஷயம் வெளிப்பட்டு விட்டதைச் சொன்னாள் தம்மா. கல்யாணம் நடப்பதன் பொருட்டு இந்தத் தற்காலிக விலகலை ஏற்று அமைதி காப்போம் என்று கூறினாள். மின்சாவுக்கு முகமே இல்லை. ஆனால் வேறு வழியும் இல்லை, அரை மனதாய்த் தலையாட்டிச் சம்மதித்தான். பாவமாகத் தோன்றிய‌ அவனைச் சமாதானப் படுத்தும் நோக்கில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் தம்மா. ரத்த நந்தகா பேருடலைச் சிலிர்த்தது. அதன் சிரத்துக்கு நேர் மேலே பறந்திருந்த இரண்டு பட்சிகள் பதறிச் சிதறின.

அன்றோடு தம்மாவும் மின்சாவும் இரவுகளில் யானைச் சவாரி போவது நின்று போனது.

தம்மாவுக்கு எப்போதும் சந்தாவின் கண்கள் அவள் மீதே இருப்பது போல் தோன்றியது. இளஞ்சோடிகள் இருவரும் பார்ப்பது, பேசுவது, பழகுவது அறவே நின்றது. நினைப்பது பன்மடங்கானது, காதல் பெருகி ஓடியது. அவனை அணைத்துக் கொள்வதாக எண்ணிக் கொண்டு கொட்டடியில் ரத்த நந்தகாவை அணைத்துக் கிடந்தாள் தம்மா. அங்கிருந்து அவள் போன பிறகு ஓர் இடைவெளி விட்டு யானையின் அதே உடல் பகுதியை தழுவிக் கொள்வான் மின்சா. அதனிடம் தம்மாவின் நறுமணம் வீசுவதாகத் தோன்றும். தம்மா அணைத்தால் சும்மா இருக்கும் அந்த‌ யானை மின்சா வந்து தழுவும் போது சுணங்கும்.

சந்தா இதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அதே சமயம் நரதுவிடம் விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தாள். ஒத்திகை பார்த்தாள். கர்ப்பவதி பிள்ளையைப் பெற்றுப் போட பேறுகாலம் முடிய நேரம் பார்த்திருப்பதைப் போல் அந்த உண்மையை உள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது அவஸ்தையாக இருந்தது. ஓரிரு முறை சொல்ல எத்தனித்து நரதுவின் கோபமான, ஆங்காரமான மனநிலையைக் கண்டு அடங்கினாள்.

ஒரு நாள் இரவு கலவி முடிந்து கசகசப்புடன் மல்லாந்திருக்கையில் சந்தா சொன்னாள்.

“தம்மாவுக்கு வயசு வந்தாச்சு. பொருத்தமான ஒரு ஆள் கிட்ட பிடிச்சுக் கொடுக்கனும்.”

“என்ன அவசரம் இப்ப? கொஞ்ச காலம் போகட்டும். சின்னப் பொண்ணுதானே அவ?”

“என்ன சின்னவ? திமிறிக்கிட்டு நிக்குது உடம்பு. எல்லாம் நேரத்துக்கு செஞ்சிடனும்.”

“அப்படியா! ம்ம்ம். சரி, பார்ப்போம்.”

நரது யோசனையாய்க் கண் மூடிக் கொண்டான். சந்தா அவனைக் கட்டிக் கொண்டாள்.

மறுநாள் புலர்ந்த பொழுதில் படுத்துக் கிடந்த ரத்த நந்தகாவின் அருகில் சென்று அதன் உடலை ஆராய்ந்து கொண்டிருந்தான் நரது. மின்சா காலைக் கடனடைக்கப் பக்கத்தில் ஒதுங்கியிருந்தான். நரதுவுக்குத் தேநீர் எடுத்து வந்தாள் தம்மா. அவளை அன்று உற்றுப் பார்த்தான். சந்தா சொன்னது உண்மைதான். இவள் சிறுபெண் அல்ல. மார்பு விரிந்து, இடை இடுங்கி, புட்டம் பரவியிருந்தது. அதே சமயம் இவள் சந்தாவைப் போல் இல்லை. ஏனோ தானோ என்றில்லாமல் இயற்கை இவளை இழைக்க மெனக்கெட்டிருந்தது.

சந்தாவும் கல்யாணத்தின் போது இப்படித்தான் இருந்தாளோ என யோசித்தான் நரது. இருக்கலாம். அழகியோ இல்லையோ இவள் புதிய பொருள், கை படாத‌ கன்னி உடல்!

தம்மா பாத்திரத்தில் இருந்து குவளை நிறைய தேநீரை ஊற்றினாள். ஆவி பறக்க, அதன் முழுமை சிந்தாமல் கவனமாக எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த நரதுவுக்கு அந்த நிதானமும் நளினமும் என்னவோ செய்ய, தேநீர்க் குவளையை வாங்காமல் சட்டெனத் தம்மாவை இறுகக் கட்டி அணைத்தான்.

அவள் பதறிக் குவளையைத் தவற விட்டு அவனை உதறி விலகினாள். சூடான தேநீர்த் துளிகள் சிதறி ரத்த நந்தகாவின் முதுகில் விழுந்து தெறித்தன‌. கண் மூடிப் படுத்திருந்த யானை தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்து விட்டு, மறுபடி படுத்துக் கொண்டது.

நரது அவளது மென்மையான கரங்களைத் தனது வலுக்கொண்ட கையால் பற்றினான். அந்த அதிர்வில் பாத்திரம் கீழே விழுந்து தேநீர் மண்ணில் வீணானது. தம்மா கத்தினாள்.

“ஐயோ, என்ன செய்கிறீர்கள்?”

“தம்மா உனக்கு உலகின் உச்சமான உன்னதமான இன்பத்தைக் காட்டுகிறேன், வா.”

“நீங்கள் என் தந்தை போன்றவர்.”

“ஆனால் நான் உன்னை என்றுமே என் மகளாக மனதில் வரித்ததே இல்லை, தம்மா.”

“உங்களுக்குத்தான் மகவே இல்லையே!”

தம்மாவின் குரலில் இருந்த ஏளனம் நரதுவைக் கீறியது. அவன் சீற்றமாகச் சொன்னான்.

“அது உன் அக்காளின் இயலாமை. அதை நிரூபிக்கத்தான் நீ எனக்கு உதவப்போகிறாய்.”

“…”

“என் உயிர்த் துளிகளை உன்னில் விதைத்துக் கருவாக்குவேன். அப்போது என் பத்தினி சந்தாவுக்கும் என் சுற்றத்துக்கும் நட்புக்கும் இந்தப் புல், பூண்டு, புழு, பூச்சி, வெண்களிறு உள்ளிட்ட மொத்த‌ உலகிற்கும் தெரியும் என் ஆண்மையில் குறையேதும் இல்லை என.”

“ச்சீய்…”

தம்மாவின் கண்களில் நீர் முட்டியது. அவள் நிஜமாகவே நரதுவை தந்தை ஸ்தானத்தில் வைத்தே பார்த்திருந்தாள். பல்லாண்டுக‌ள் முன் அவன் சந்தாவைக் கல்யாணம் செய்த போது அவன் மீது தம்மாவுக்கு ஒரு வசீகரம் இருந்ததுதான். ஆனால் அது புதிதாகக் காணும் அந்நிய ஆணின் மேல் ஒரு சிறுமிக்கு ஏற்படும் ஆர்வம் மட்டுமே எனப் புரிந்து போய் பிற்பாடு யானையை நிர்வகிக்கும் அவனது தொழிற்திறன், அக்காவின் மீது அவன் காட்டும் அலாதிப் பிரியம் எல்லாம் வைத்து மரியாதைதான் அதிகம் இருந்தது.

எல்லாம் மிகச் சில கணங்களில் நொறுங்கிப் போய்க் கிடக்கிறது. இன்னமும் அவளால் நரதுவின் அந்தச் செய்கையை நம்பவும் இயலவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை.

அப்போது மின்சா அங்கே வர, தன் கையைப் பற்றிக் கொண்டிருந்த‌ நரதுவின் கரத்தை விடுவித்துக் கொண்டு கீழே கிடந்த குவளையையும் தேநீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிப் போனாள் தம்மா. நரது மின்சாவைப் பார்த்து முறைத்தான்.

மின்சா சூழல் புரிந்து ஏதும் பேசாமல் யானையின் மீது சிந்தியிருந்த தேநீர்க் கறையைத் துடைத்துச் சுத்தம் செய்தான். நிலத்தில் கொட்டியிருந்த தேநீர் உலரத் தொடங்கியது.

*

உண்மையில் இது நரது மனதில் அல்லது உடலில் உண்டான ஒரு தற்காலிகச் சலனம் என்றும் நாட்கள் போகக் கரைந்து காணாமல் ஆகிடும் என்றே நம்பியிருந்தாள் தம்மா. ஆனால் நாட்கள் போகப் போக அவனது வேட்கை அதிகரித்தபடியேதான் இருந்தது.
 
நரது கிட்டத்தட்ட தினம் ஏதாவது சந்தர்ப்பத்தில் தம்மாவைச் சீண்டினான். தொடுகை, அணைப்பு, முத்தம் என மெல்ல அவனது அராஜகங்களின் எல்லை விரிந்து கொண்டே போனது. அவளது பகல்கள் நரகமாகின; விடியல்கள் வெறுப்புக்கு உரியதாக மாறின. எங்கிருந்து எங்கே நரது தீண்டுவான் என்ற அச்சத்திலேயே தினங்களின் கணங்கள் யாவும் தீர்ந்தன‌. நரதுவுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்தாள்.

ஒரு கட்டத்தில் மின்சா அருகே இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இது நடந்தேறியது. மின்சா ஒன்றும் செய்யவியலாமல் பல்லைக் கடித்தான். சில சமயம் நரதுவை அடித்துப் போட்டு விட்டு தம்மாவை அழைத்து வெளியேறி விடலாம் என்று வெறியேறும். ஆனால் அதற்குப் பின் எப்படிப் பிழைப்பது? அதுவும் தம்மாவைத் துன்புறுத்தவே செய்யும் எனப் பொறுத்துக் கொண்டான். தவிர, ரத்த நந்தகாவின் வழியாக நரதுவுக்கு அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்குக்கு என்ன வேண்டுமானாலும் தங்களைச் செய்ய முடியும். ஒருத்தி மீது காமப் பித்தேறிய ஆண் பசியிலிருக்கும் புலியை விடக் குரூரமானவன், எந்த நியாய தர்மமும் அவன் யோசனையில் இராது. தன் இலக்கை எய்த எந்தப் பாவமும் செய்யத் தயங்க மாட்டான். எனவே தம்மாவிடம் நரது அத்துமீறும் போதெல்லாம் த‌ன் கண்களை மூடிக் கொண்டான், காதுகளை மூடிக் கொண்டான், மனதையும் மூடிக் கொண்டான்.

சந்தாவிடம் மட்டும் இதைக் கவனமாக மறைத்தான் நரது. அது அவள் மீதான பிரியமா, பயமா எனத் தம்மா யோசித்தாள். இரண்டும் இல்லை, இரவின் தேவைதான் என்று புரிய அதிக காலம் எடுக்கவில்லை. தம்மாவும் அதைச் சந்தாவிடம் சொல்லி அவள் மனதை உடைக்க விரும்பவில்லை. பிள்ளைப் பேறில்லை என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்வில் பிரச்சனை ஒன்றுமில்லை. இதைச் சொல்வது அவர்களிடையே நிரந்தரப் பிரிவைக் கூட உண்டாக்கலாம். ஆனால் இதற்கு முடிவு என்ன என்பதும் தம்மாவுக்குத் தெரியவில்லை. தாளவியலாமல் என்றேனும் அவளிடம் சொல்ல வேண்டி வரும் என்பது மட்டும் புரிந்தது.

ஆனால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரியாத அளவு பெண் நுண்ணுணர்வு அற்றவள் கிடையாது. அதுவும் தனக்கு உரியவனின் பிறழ்வுகள் அவளுக்குப் புரியாமல் போவதே இல்லை. சந்தா மிகச் சீக்கிரத்திலேயே நரது தனது தங்கையைப் பெண்டாள நினைப்பதைப் புரிந்து கொண்டாள். ஆனால் அதை அவர்கள் இருவரிடமுமே காட்டிக் கொள்ளவில்லை. நரதுவுக்குத் தெரிந்தால் அதன் பிறகு இருக்கும் தயக்கம் போய், தன் முன்னாலேயே அக்கிரமங்களை நிகழ்த்தக்கூடும், மணம் செய்து கொள்கிறேன் என‌த் தன்னையே அதற்குத் துணை போகக் கேட்கக்கூடும். தெரியாத வரைதான் குற்றத்தை மறைத்துச் செய்யும் மரியாதை எல்லாம். தம்மாவிடமும் என்னவென வெளிப்படுத்திக் கொள்வது? அவள் தீர்வு கேட்க மாட்டாளா? பொறுத்துப் போ என்பதைத் தவிர என்ன தீர்வு என்னிடம் இருக்கிறது? தனக்குள்ளையே வைத்துப் புழுங்கி மனம் குமுறினாள்.

இயற்கை தீர்வையும் பிரச்சனை வடிவில்தான் கொடுக்கும். ஓர் இரவு சந்தாவுடனான கலவி முடிந்து அவள் அயர்ந்து உறங்கிய பின் பின்னிரவில் நரது சப்தமெழுப்பாமல் தம்மா படுத்திருக்கும் வலப்புற‌ அறைக்கு நழுவினான். அங்கே தூங்கிக் கொண்டிருந்த தம்மாவின் மார்பை மூடியிருந்த மேலாடையின் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாக, எந்த அசைவோ ஓசையோ இன்றி மிக லாகவமாக அவிழ்த்தான். அவன் விரல் இறுதி முடிச்சை அவிழ்த்த கணம் பதறி விழித்துக் கொண்டு அலறினாள் தம்மா.

அது அடுத்த அறையிலிருந்த‌ சந்தாவையும் துயிலெழுப்பி விட்டது. அவசரமாக‌ எழுந்து ஓடி வந்தாள். தம்மா அறையின் மூலையில் நின்று தன் மேலாடை திறந்திருக்க‌ இரண்டு கரங்களையும் மார்புக்குக் குறுக்கே வைத்து மறைத்தபடியே அழுது கொண்டிருந்தாள்.

நரது மௌனமாக அந்த அறையிலிருந்து நீங்கினான். சந்தா ஒன்றும் சொல்லவில்லை. தம்மாவைப் படுக்கச் சொல்லி விட்டு அவளருகே படுத்துக்கொண்டாள். தம்மா அவளை அணைத்துக் கொள்ள, சந்தாவின் விழிகள் அந்த இரவு முழுக்க கண்ணீரைச் சொரிந்து கொண்டே இருந்தன. தம்மாவும் கூட‌ நெடுநேரம் விழித்துக் கொண்டுதான் இருந்தாள். அந்தக் கண்ணீர் தன் பொருட்டு என்பது அவளுக்குக் குற்றவுணர்ச்சியை அளித்தது.

சந்தா பிறகு அது பற்றி நரதுவிடம் ஏதும் கேட்கவில்லை. தம்மாவிடமும் பேசவில்லை.

சந்தாவுக்கு அவ்விரவின் அசம்பாவிதத்தில் ஓர் உறுத்தல் இருந்தது. தம்மாவின் சம்மதம் அல்லது ஒத்துழைப்பு இல்லாமல் அவ்வளவு இறுக்கமான மேலாடை முடிச்சுகளை நரது அவிழ்த்திருக்க முடியுமா என. தம்மா சிறுவயதிலிருந்தே சன்னச் சலனத்துக்கும் தூக்கம் கலைபவள். ஆழ்ந்த நித்திரையில் இருக்கையில் அது சாத்தியம்தான் எனச் சமாதானம் செய்து கொண்டாள். இல்லை என்றால் தம்மா ஏன் அலறி ஊரைக் கூட்டப் போகிறாள்? சத்தம் காட்டாமல் மேற்கொண்டு காரியம் ஆற்றியிருக்கலாமே! ஒருவேளை இடையில் மனம் மாறி விட்டாளோ! சந்தாவின் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

இர‌ண்டுங்கெட்டான் வயதுடைய தம்மாவுக்கு நரது மீதான ஈர்ப்பு எந்த வகையிலும் வந்திருக்கலாம். அவன் திண்மையாக உடலைப் பேணுபவன். அழகன் எனச் சொல்லும் அளவு சிறப்பான முகவெட்டு உடையவன். அவன் மீது எந்தப் பெண்ணுக்கும் கவர்ச்சி தோன்றவே செய்யும். தம்மா அருகே இருந்து அவனது முழு ஆகிருதியைப் பார்த்தவள்.

இன்னொரு விஷயம் தினமும் சந்தாவைக் கலவி செய்பவன். தடுப்புகள் உண்டெனினும் அது ரகசிய‌ங்கள் பேண முடியாத குடில். சந்தாவும் நரதுவும் புணர்ந்த தருணங்களின் காட்சிகளோ ஒலிகளோ விபத்தாகத் தம்மாவை அடைந்திருந்தால் வியப்பில்லை. இவை யாவும் ஒரு பதின்மப் பெண்ணுக்கு அந்த ஆடவனின் மீது மோகமேறவே வழி கோலும்.

அதுவும் அவனே அவளை அணுகும் போது உடலைத் திறப்பதற்கு அவளது மனம் இளகக் கூடும். அதனால் தம்மா நரதுவுக்கு இணங்கி விடக்கூடாது என்பதே சந்தாவின் பிரதானக் கவலை. ஆனால் தம்மா மின்சாவைக் காதலிக்கிறாள். அதன் பொருட்டேனும் நரதுவின் இச்சைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே விழைவாள் என்று சமாதானம் கொண்டாள்.

மற்றபடி, தம்மா நரதுவின் பக்கம் சாய முடிவெடுத்து விட்டால் எதுவும் அதைத் தடுக்க முடியாது என்பது சந்தாவுக்குப் புரிந்தே இருந்தது. அடைத்து வைத்தாலும் பயனில்லை, பெண் தன் விருப்பம் நிறைவேற்றிக் கொள்வாள். சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்!

ஆனாலும் தன்னால் ஆனதைச் செய்து இருவரையும் விலக்கி வைக்கத் தீர்மானித்தாள்.

சந்தா இரவுகளில் தம்மாவை அணைத்துப் படுத்துக் கொண்டாள். அதாவது நரதுவுடன் கலவி முடிந்ததும் எழுந்து பக்கத்து அறைக்கு வந்து தம்மாவுடன் படுத்துக் கொள்வாள். அது நரதுவுக்கு எரிச்சலை ஊட்டினாலும் அதைக் கேட்க அவனுக்குத் திராணியில்லை.

சந்தா எப்போதும் அவளைத் தன் கண்காணிப்பு வட்டத்திலேயே வைத்துக் கொண்டாள். அது தம்மாவுக்குச் சற்று சங்கடம் ஊட்டியது. சந்தாவிடம் ஏதோ உறுத்தல் இருப்பதைக் கண்டுகொண்டாள். சந்தாவின் கவலை நரது தம்மாவைப் புணர்வது பற்றியதா அல்லது அதன் விளைவாக‌ தம்மா கர்ப்பமுற்று, குறை சந்தா மீதுதான் என்று நிரூபணமாவது பற்றியதா என யோசித்தாள் தம்மா. அப்படியே முதல் விஷயம்தான் கவலை என்றாலும் அது தன் புருஷன் இன்னொருத்தியை நாடிப் போய்த் தன்னை அவமதிப்பது பற்றியதா அல்லது தங்கை வாழ்க்கை அவளது விருப்பமின்றிச் சீரழிகிறதே என்பது பற்றியதா?

தலை வலித்தது. ச்சே, அவள் என் அக்கா. அவளையா சந்தேகிப்பது? அதுவே அவளுக்கு இழைக்கும் துரோகம்தானே! அன்றைய நெடிய இரவில் தன்னை நனைத்துக் கொண்டே இருந்த சந்தாவின் கண்ணீர்த்துளிகள் தனக்கானவைதாம் என எண்ணிக் கொண்டாள்.

*

அந்த இரவால் ஒரு நன்மை நேர்ந்தது. நரதுவின் தொந்தரவுகள் மட்டுப்பட்டன. முற்றிலும் நிற்கவில்லை என்றாலும் முந்தைய அளவுக்கு அதிகமாக‌ இல்லாமல் குறைந்தன. அவன் சந்தாவிடம் இணக்கம் பேண விரும்புகிறான் என்பதே அதிலிருக்கும் செய்தி என தம்மா புரிந்து கொண்டாள். ஆனால் அது தற்காலிகமாக இருக்கலாம். பாய்வதற்குப் பதுங்கும் புலியாகவும் இருக்கலாம், புயலுக்கு முந்தைய அமைதியாகவும் இருக்கலாம். எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை துரிதமாக இதற்குத் தீர்வு கண்டாக‌ வேண்டும்.

தம்மா தொடர்ச்சியாக இச்சிக்கலுக்கு வழிகள் யோசித்தாள். அக்கா வெளிப்படையாகப் பேசினால் அவளிடம் ஆலோசனைக‌ள் கேட்கலாம். ஆனால் அவளோ இப்போதெல்லாம் ரொம்ப அமைதியாகி விட்டாள். ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசுகிறாள். எனவே தனியாகவே குழம்பினாள். ஒரு நாள் தீர்மானம் செய்தவளாக மின்சாவிடம் பேசினாள்.

“மின்சா, நான் நரதுவிடம் நம் காதலைப் பற்றிச் சொல்லி விடப் போகிறேன்.”

“அவசரப்படாதே, தம்மா...”

“அஞ்சுகிறாயா, மின்சா?”

“நிச்சயம் இல்லை. பொறுமை காக்கச் சொல்கிறேன். நமக்குக் காரியமாவது முக்கியம். நிதானமாகக் காய் நகர்த்திச் சேர்ந்து வாழ ஏதுவான சூழலை அமைத்துக் கொள்வோம்.”

“ம்.”

“யோசித்துப் பார். நாம் இருவருமே பதின்ம வயதைத் தாண்டவில்லை. எனக்குள்ள ஒரே வருமானம் இங்கே நரதுவிடம் உதவியாளனாக இருப்பதை ஒட்டித்தான். இப்போது நம் விஷயம் அவனுக்குத் தெரிய வந்தால் என்னை வேலையிலிருந்து அடித்து விரட்டுவான். உன் மனம் காதலில் உழல்வதை அறிந்தால் இப்போது சில்லறைத் தொந்தரவு என்ற அளவில் செய்து கொண்டிருப்பவன் உன்னை உடனே அடைய ஏதும் செய்து விட்டால்?”

“அதாவது நரது என்னை இப்போது செய்யும் சுரண்டல்கள் உனக்குப் பொருட்டல்ல?”

“அப்படி இல்லை, தம்மா. இதை வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கும் எனது கையறு நிலையை எண்ணிக் குமையாத நாளில்லை. நான் ஓர் ஆண்மகன்தானா என என்னை நானே வசை பாடிக் கொண்டு குற்றவுணர்வில் உழல்கிறேன். சில சமயம் தற்கொலை எண்ணங்கள் உதிக்கின்றன. சில வேளைகளில் நரதுவைக் கொலை செய்து விடலாமா என்றும் தோன்றுகிறது. ஆனாலும் ஏதும் செய்து வீரியம் காட்டாதிருக்க ஒரே காரணம் - நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னோடு வாழ விரும்புகிறேன். இவற்றை ஒரு வெறி நாய்க் கடி போல், ஒரு மோசமான விபத்து போல். துர்சொப்பனமாக‌ எண்ணிக் கடந்து விடவே விரும்புகிறேன். நீயும் அப்படி இருப்பதேமன உளைச்சல் இல்லாத எதிர்காலம் காண‌ ஒரே வழி. மாறாக நீ எதிர்த் திசையில் பேசி மேலும் என்னைப் புண்படுத்தாதே.”

“ம்.”

“அதனால் அவசரப்படாதே. நாம் இங்கே சேர்ந்து வாழ இயலாது. பொருளாதாரரீதியாக நாம் வெளியே போய் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனக்கு வெளியே ஏதாவது வேலை வாய்க்க‌ வேண்டும். அப்படிக் கிடைத்த‌ மறுநாளே இங்கே இருந்து ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வோம். அப்புறம் தொந்தரவு கிடையாது.”

“அப்படிப் போனால் மட்டும் விட்டு விடுவானா? நரதுவின் செல்வாக்கு தெரியாதா?”

“ஆம். அவன் நம்மை விரட்டி வரக்கூடும். தொந்தரவுகள் தரக்கூடும். ஆனால் அப்போது நமக்கு ஆதரவு வரும் என நம்புகிறேன். சுற்றத்திடம், அரசாங்கத்திடம், வெகுமக்களிடம். அந்த நம்பிக்கைதான். நாம் எதையாவது பற்றிக் கொண்டுதான் ஆக‌ வேண்டும், தம்மா.”

அரை மனதாய்த் தலையாட்டினாள். மின்சாவுக்கு வேலை கிடைத்ததும் அங்கிருந்து போய் விடலாம் என்ற யோசனை அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் தேடாமல் பணி கிட்டாது. யாரும் வந்து அவனை வேலைக்கு அழைக்கப் போவதில்லை. இங்கிருந்தபடி வேலை தேட மின்சாவால் முடியாது. அவன் அத்தனை சூதானமானவனும் அல்லன்.

தம்மா தீர்மானித்தாள். ச‌ந்தாவிடம் போய் நின்றாள். மொத்தக் கதையும் ஒப்பித்தாள். மின்சாவுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இருவரும் தப்பிப் போக உதவ வேண்டும் என்றும் கோரினாள். சந்தாவின் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது.

நரதுவின் மீது தம்மாவுக்கு ஆசை இல்லை என்பதே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள். அது வரையில் அவளை நரதுவிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னாள். அவர்களின் காதல் விஷயம் அவனுக்குத் தெரியாமலும் கவனமாக இருக்கச் சொன்னாள். யோசிக்க ஆரம்பித்தாள்.

தம்மாவின் தாய் அவள் பிறந்த ஓராண்டிலேயே கொள்ளை நோய் கண்டு மாண்டாள். அப்போது தம்மா பால் குடியைக் கூட நிறுத்தியிருக்கவில்லை. அன்றிலிருந்து சந்தா அவளுக்கு அம்மாவானாள். தம்மாவின் அப்பா சந்தாவுக்குத் திருமணமான மிகச் சில மாதங்களில் காட்டில் மரம் வெட்டப் போகையில் நெடிய, கரிய பாம்பு ஒன்று தீண்ட, வெண்ணுரை கக்கிச் செத்துப் போனார். அப்போது இல்லத்தில் இருந்த ஒரே ஆணான புது மாப்பிள்ளை நரதுவைத் தகப்பனின் இடத்தில் வரித்துக் கொண்டாள் தம்மா. நரது, சந்தாவுக்குப் பிள்ளை இல்லை என்றதும் அவர்களின் வாரிசாகவே ஆகிப் போனாள்.

காமப் பித்தேறி நரது அதிலிருந்து பிறழ்ந்தாலும் தம்மா மீதான பார்வையை சந்தா மாற்றவில்லை. எனவே அவளுக்கு மகளைக் கரை சேர்க்கும் பெரும் கடனிருந்தது.

மிகுந்த சிரமத்திடையே சந்தா தனது தந்தை வழித் தொடர்புகளைக் கண்டடைந்தாள். அவர்கள் மூலம் மின்சாவுக்கு வேலை தேடினாள். அதை நரதுவின் செவிகட்குப் போய்ச் சேராமல் செய்து முடிக்க வேண்டும் என்பதே பெரிய சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா உறவினர்களுக்கும் அவனோடு பழக்கம், தொடர்பு இருந்தது. அவள் அவர்களைத் தொடர்பு கொண்டதுமே விஷயம் நரதுவுக்குத் தெரிய வந்து விடும் என்பதாக இருந்தது. எனவே சர்வ‌ கவன‌த்துடன் தேடினாள். சரியாக மூன்று திங்களில் வேலை வாங்கினாள்.

தலைநகரில் மாமன்னன் பயின்னவுங்கின் படைத் தளபதிகளில் ஒருவராகச் சமீபத்தில் பொறுப்பு ஏற்ற‌வரின் குதிரை லாயத்தைப் பராமரிக்கும் வேலை. மின்சா மணமானவன் என்று சந்தா ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் அந்த மாளிகைக்கு உள்ளேயே பணியாளர்கள் தங்குமிடத்தில் அவன் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முதல் தடை நீங்கியது. அடுத்து அங்கிருந்து விடுவித்துக் கொள்தல். இப்போது மூவரும் அவ்வப்போது ஒன்று கூடிப் பேசினார்கள். நிதானமாக‌த் திட்டமிட்டார்கள். சந்தாவின் யோசனைகள் கேட்க தம்மாவுக்கு வியப்பாக இருந்தது. எத்தனை குற்றத் தீவிரத்துடன் யோசிக்கிறாள்! வீட்டில் சோறாக்கி வைத்து, மல்லாக்கப் படுத்துப் பிள்ளைக்கு ஏங்கிக் கொண்டிருந்த அப்பாவியா இவள் என வியந்தாள். ஒரு பெண் தன் கணவனைக் காத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வாள் என்று என்ணிக் கொண்டாள். எதிர்காலத்தில் மின்சா இப்படி ஏதும் தடுமாறினால் தான் எப்படி எதிர்கொள்வேன் என யோசித்தாள்.

இருள் திருட்டுத்தனத்தின் ந‌ற்துணை. அமாவாசை அன்று நள்ளிரவுக்குப் பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தலைநகரை நோக்கிக் கிளம்புவது என முடிவானது. தான் சிறுகச் சேர்த்திருந்த சிறிய தொகையை எடுத்து தம்மாவிடம் கொடுத்துச் சொன்னாள் சந்தா -

“நம் பெற்றோர் இன்றில்லை. நான் உன் தாய் ஸ்தானத்தில் இருந்து நகை, உடை போட்டு உனக்குத் திருமணம் முடிக்க வேண்டும். இன்று அதற்குச் சூழல் இல்லை. எனவே இந்தப் பணத்தை வைத்துக் கொள். இது என்னாலான சீதனம். நீங்கள் வாழ்க்கை தொடங்கவும், பிற்பாடு அவசரத் தேவைகள் வந்தாலும் இது உதவும். ஆனால் கவனமாகச் செலவழி!”

“…”

“என் அறிதலில் மின்சா நல்லவன். அப்பாவி. நீ வளைப்பதற்கேற்ப வளைவான். அவனை வெற்றிகரமானவனாக ஆக்குவது உன் கையில்தான் இருக்கிறது. முடிந்த அளவு உந்து. அவன் முன்னேறட்டும். ஆனால் எப்போதும் அவனை உன் கைக்குள் வைத்திரு. நீ வயது வந்தவள். நான் சொல்லித் தரப் பெரிதாக ஒன்றுமில்லை. வித்தை தானாக வசப்படும்.”

“…”

“உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதே. குழந்தை - அதுதான் உன் வாழ்க்கையை நிச்சயமாக்கும். உனக்குப் பாதுகாப்பினை அளிக்கும்.”

தம்மாவின் வயிற்றில் கரம் வைத்து சந்தா ஆவேசமாகச் சொல்லி விட்டு அழுதாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள் தம்மா. நெடுநேரம் பிரியவே இல்லை.

*
(தொடரும்)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2023 18:34
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.