ஒன்றென்றிருத்தல், கடிதம் – சிகரம் பாரதி

Pa Raghavan

அன்பின் பாராவுக்கு,

Multi Tasking பற்றிய பதிவைக் கண்டேன். அந்தக் கலையில் நான் பூச்சியம் என்கிறீர்கள். முற்று முழுதாக அப்படிச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. போன் பார்க்கும் போதே, எழுதவும், அதன்போதே சாப்பிடவும், அதே சமயம் நடக்கவும் முடியும் என்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது. கணினி, தொலைபேசி ஆகிய உபகரணங்கள் Multi Tasking வசதிகளை வழங்குகின்றன. ஆனால் அவையும் வீடியோ எடிட்டிங் செய்யும் போதே ஆடியோ எடிட்டிங் செய்வதில்லையே? மாறாக ஒரு பக்கம் யூடியூப் வீடியோவை ஓடவிட்டு, மறுபக்கம் ஆடியோ எடிட்டிங் செய்ய வசதியளிக்கின்றன. அல்லது ஒரே திரையில் பல ஆவணங்களை திறந்து வைத்து அவற்றைப் பார்த்து வேறு ஏதாவதொரு ஆவணத்தில் தட்டச்சு செய்ய உதவுகின்றன. ஆகவே ஒரே நேரத்தில் பத்து விடயங்களை செய்யும் Multi Tasking வசதி உபகரணங்களிலேயே இல்லை என்றே நினைக்கிறேன்.

பொதுவாக Multi Tasking என்பது பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் திறன் அல்லது பல பணிகளுக்கு இடையில் விரைவாகவும் திறமையாகவும் மாறுவது என்று கூறப்படுகிறது. டிவி பார்க்கும் போதே சாப்பிடுவது என்பது இரண்டின் மீதும் முழுக் கவனம் இல்லாமல் இரண்டையும் அரைகுறையாக செய்யும் ஒன்று. அதை Multi Tasking கலை என்று சொன்னால் அது கொலையாகிவிடும். அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளுக்கு இடையே இலகுவாக மாறிக்கொள்ள முடிகிற வசதியே அந்தக் கலையாக இருக்க வேண்டும். தாங்கள் தொலைக்காட்சித் தொடர் எழுதும் போது ஒரு கட்டுரைக்கான அவசரம் வந்தால் இதை வைத்துவிட்டு அந்தக் கட்டுரையை எழுத முடிந்தால் அதுதான் Multi Tasking என நினைக்கிறேன். அதை நீங்கள் சிறப்பாக செய்திருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

இன்றைய அவசர உலகில் நாம் செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆகவே இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கட்டுரை என்றால் அதை மட்டும் தான் எழுதுவேன், கவிதையைத் தொடக்கூட மாட்டேன் என்று தலைகீழாக நிற்க முடியாது. ஒவ்வொரு வேலைகளுக்கு இடையிலும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஆகவே Multi Tasking என்பது ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது அல்ல என்பதும், பல வேலைகளை ஒரே சந்தர்ப்பத்தில் முகாமைத்துவம் செய்வது என்பதும் எனது கருத்து. ஆனால் வேலைகளுக்கு இடையே எவ்வாறு நம்மால் விரைவாக மாறிக்கொள்ள முடிகிறது என்பதுதான் அந்தக் கலையில் நாம் விற்பன்னரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

சிகரம் பாரதி
இலங்கை
மலையகம்

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 05:33
No comments have been added yet.